ஆண்பால், பெண்பால், அன்பால் - பாரதி தம்பி


ருவர் தீண்டத்தகுந்த சாதியில் பிறப்பது அவருடைய தேர்வல்ல. ஆனால் இந்து சாதி அமைப்பு தீண்டத்தகுந்த சாதியில் பிறப்பதினாலேயே அவருக்கு சில மரபுரிமைகளை வழங்குகிறது. அவர் விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் அந்த மரபுரிமையின் பலன்களை அனுபவிக்கிறார். இதைப்போலவே ஆண் என்பதாலேயே பல்வேறு மரபுரிமைகளை ஆண்கள் பெறுகின்றனர். தங்கைக்கு  சோறும், தம்பிக்கு மட்டும் ஒரு முட்டையும் சேர்த்து வைப்பதில் இருந்தே பெற்றோர்கள் இதை தொடங்கி வைக்கின்றனர். உணவில் தொடங்கி உடை வரைக்கும் இந்த மரபுரிமையை துய்த்து வளரும் ஓர் ஆணின் மனம், மேலாதிக்கப் பண்புகளுடன் இருப்பதை இயல்பு என கருதுகிறது

இப்படி சொல்வதன் பொருள், ‘ஆணாதிக்கத்தை ஆண்கள் விரும்பி; மனமொப்பி செய்யவில்லை. தங்களுக்கு வழங்கப்படும் சலுகைகளை தன்னை அறியாமல் அனுபவிக்கின்றனர்என்பதல்ல. அடிப்படை மனித பண்புகள் கொண்ட எந்த ஓர் ஆணாலும் இந்த சிறப்பு சலுகையில் இருந்து தன்னை விடுவித்துக்கொள்ள முடியும். இதற்கு கொள்கையும்; கோட்பாடும் அறிந்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. ஆனால் ஆணுக்கு வழங்கப்படும் இந்த சலுகைகள் அனைத்தும் அவனது பாலின பெருமிதமாக இங்கே நிலைநிறுத்தப்பட்டுள்ளது. ‘ஆம்பளைப்புள்ளை எப்படி வீடு கூட்டுறது?’, ‘ஆம்பளைப் புள்ள எப்படி துணி துவைக்கிறது?’ என்றால்பொம்பளப் புள்ளஎப்படி இவற்றை எல்லாம் செய்கிறதோ, அதைப்போலதான் செய்ய வேண்டும். துணி துவைக்க என்ன காளியின் கைகளா வேண்டியிருக்கிறது

ஆனால், ஆணுக்கும், பெண்ணுக்குமான உறவுநிலை சம ஜனநாயகம் உள்ளதாக இருப்பதற்கான வாய்ப்பு ஏற்கெனவே உள்ளநமது குடும்ப அமைப்பில் சாத்தியமே இல்லை. நமது குடும்ப அமைப்பு இயல்பிலேயே ஜனநாயக மறுப்பும், பாலின சமத்துவ மறுப்பும் கொண்டது. இங்கு ஆண் என்பவர் அதிகாரத்தின் திருவுரு. பெண் என்பவர் சேவகம் செய்வதன் மறுவடிவம். சந்தேகம் இருந்தால் கணவனை வேலைக்கு அனுப்பிவிட்டு கை குழந்தையுடன் வீட்டில் காத்துக்கிடக்கும் பெண்களை கேளுங்கள். அவர்களின் உலகம் அப்படியே உறைந்து கிடக்கிறது

வீட்டு வாசலில் நூறு வண்டிகள் வந்து சென்றாலும் கணவனின் வண்டி சத்தத்தை தனித்து இனம்பிரித்து உள்ளுணரும் திறன் பெண்களுக்கு இருப்பது திறமையல்ல. மாறாக, கூண்டில் இருக்கும் ஒரு பறவையின் தத்தளிப்பு அது. வெறுமையில் இருந்து ஆசுவாசத்தைத் தேடும் பரிதவிப்பு. சில ஆண்டுகள் இந்த வாழ்வுக்கு பழக்கப்படும் ஒரு பெண், குடும்பம் என்ற பல்லாயிரம் ஆண்டு கால பலிபீடத்தில் தானும் ஓர் கை பிடி மண்ணாய் இணைந்துவிடுகிறாள்

இதில் இருந்து பெண்ணுக்கு விடுதலை வேண்டுமானால் நமது குடும்ப அமைப்பு என்ற குட்டிச்சுவர் அடியோடு உடைய வேண்டும். விரும்பினால் இணைந்து வாழ்வதும், விருப்பம் இல்லையெனில் பிரிந்து செல்வதும் மிக இயல்பான ஒரு நடவடிக்கையாக இருக்க வேண்டும். ’விவகாரத்து குறைவாக நடக்கிற நாடு இந்தியாஎன்பதும், ‘இந்திய குடும்ப அமைப்பு போல புனிதமான ஒன்று உலகிலேயே இல்லைஎன்பதும் வாட்ஸ் அப் ஃபார்வேர்டுகளுக்கு உதவலாம். நடைமுறை வேறு.

நமது குடும்ப அமைப்பு வெளியேறவே முடியாத ஒரு வழிப்பாதையாக இருக்கிறது. இங்கே உள்ளே வரலாம். வெளியே போவது சுலபம் இல்லை. விருப்பமற்ற மண வாழ்வை சகித்துக்கொண்டு ஆண்டுக்கணக்கில் இணைந்து வாழும் துன்பத்தை விட கொடியது எதுவும் இருக்க முடியுமா?  'ஒவ்வொரு நாளும் இருவரும் இணைந்தே படுக்கைக்குச் செல்கிறோம். யாரேனும் ஒருவர் கொலையாகும் சாத்தியத்துடன்' என்ற சல்மாவின் கவிதை நம் குடும்பங்களின் குறுக்குவெட்டுத் தோற்றம்

நவீன கால வாழ்க்கை முறை கோரும் அபரிமிதமான உழைப்பு, ஆண்-பெண் உறவில் செலுத்தும் தாக்கத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது.  திருப்பூர் பனியன் தொழிற்சாலைகளில் சுமங்கலி திட்டம் என்ற பெயரில் ஏழை பெண்களின் உழைப்பை உதிரம் சுண்ட உறிஞ்சி எடுப்பதற்கு பாலின அடையாளம் ஒரு கருவியாகிறது. சுமங்கலி திட்டத்தில் ஆண்கள் இல்லை

திருநெல்வேலி மாவட்டம் பாவூர்சத்திரம், ஆலங்குளம், தென்காசி பகுதிகளில் எந்த கிராமத்தில் நுழைந்தாலும் தெரு நெடுக நூற்றுக்கணக்கான பெண்கள் பீடி சுற்றியபடி அமர்ந்திருப்பார்கள். ஒவ்வொரு நாளும் ஆயிரக்கணக்கான பீடிகள் வீதம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக பீடி சுற்றியபடியே இருக்கும் பெண்கள் லட்சக்கணக்கானோர் இப்பகுதியில் உண்டு. அவர்கள் பீடி சுற்றும் வேகமும், அது அனிச்சை நடவடிக்கையாக மாறியிருப்பதையும் காணும்போது ஒரு கணம் அவர்களின் விரல்களும் பீடிகளாய் மாறிவிட்டதைப் போலவே தோன்றும். திருமணத்துக்கு முன்பு சில ஆண்டுகள் ஒரு பெண் பீடி சுற்றினால் அவரது கணக்கில் வரவு வைக்கப்படும் 'பிடிபணம்' அந்தப் பெண்ணின் வரதட்சணையாய் கணக்கிடப்படுவதும் நடக்கிறது. கறிக்காகவே வளர்க்கப்படும் பிராய்லர் கோழிகளைப் போல, திருமணத்துக்காகவே பெண்களை வளர்க்கிறார்கள் நம் குடும்பங்களில். பிறந்த நாள் முதலாய் திருமணம் மட்டுமே ஒற்றை இலக்காக நிர்ணயிக்கப்பட்டு அந்தப் பெண்ணின் அகமும், புறமும் அதற்கு இசைவாகவே மாற்றப்படுகிறது.  

நவீன கால ஆண்கள் சுமக்கும் பொருளாதார சுமையின் கணமும் மிக கொடியதே. நாள் ஒன்றுக்கு 100 கிலோமீட்டர் டூ வீலர் ஓட்டி டெலிவரி பாய்களாய் வேலைசெய்யும் இளைஞர்கள் எல்லாம் யார்? காலை 10 மணிக்கு அலுவலகம் நுழைந்தால் இரவு 8 மணி வரை கணிணித் திரைமுன் கண்களை அகற்றாமல் அமர்ந்திருக்கும் இளைஞர்கள் யார்? தங்கள் இளமையை அடகுவைத்து வெளிநாடுகளில் உழைத்துக்கொட்டும் இளைஞர் கூட்டம் யார்? எதற்காக இவர்கள் உழைக்கும் இயந்திரங்களாக மாறிப்போயுள்ளனர்? ஏனெனின் குடும்பத்தின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும் சுமை அவர்களின் முதுகில் இருக்கிறது. அவர்கள் அழாமல் இருக்கலாம். வலிக்காதது போல நடிக்கலாம். ஆனால் அது அவர்களின் பெருந்தன்மை

உண்மையில் 30 வயதை ஒட்டியுள்ள ஓர் ஆண் தன் சக்திக்கு மீறிய பொருளாதார சுமையை சுமக்கிறான். ஊதாரித் தனமாக திரிபவர்களுக்கு சிக்கல் இல்லை. பொறுப்புடன் ஓர் ஆண் இருந்தால் இந்த சுமைகளில் இருந்து தப்பவே முடியாது. நான்கைந்து ஆண்டுகளுக்கு முன்பு, ‘வேலைதான் கன்ஃபார்ம் ஆயிடுச்சேஎன்ற நம்பிக்கையில் வாங்கிய டூ-வீலருக்கு இன்னும் தவணை முடிந்திருக்காது. தங்கையின் திருமணக் கடன் ஓரிரு லட்சங்கள் மீதமிருக்கும். ’மாத சம்பளக்காரன். வாழ்க்கையை ஓட்டிவிடலாம்என்ற நம்பிக்கையில் தன்னை திருமணம் செய்துகொண்ட மனைவியின் விருப்பங்களை ஓரளவுக்கேனும் நிறைவேற்றியாக வேண்டும். ஒவ்வொரு குடும்ப நிகழ்ச்சிக்கும் புதுத்துணி என்று இல்லாவிட்டாலும் விழா நாட்களில் புத்தாடை என்பது பேராசை அல்ல

குளிர்சாதனப் பெட்டி, தொலைகாட்சிப் பெட்டி, அமர்வதற்கு சோபா, கொடுங்கோடையை சமாளிக்க .சி... என ஒரு நகர்ப்புற நடுத்தர வர்க்கத்தின் தேவைகள் ஒருபோதும் முடிவடைவது இல்லை. குழந்தைகள் தவழும் வீட்டில் இந்த செலவுகள் இரட்டிப்பாகும். எதையும் தவிர்ப்பதற்கில்லை. ’வளர்ற குழந்தைக்கு எதைப் போட்டாலும் ரெண்டு மாசத்துல பத்தாமப் போயிடும். அப்புறம் என்ன... பாண்டி பஜார்ல 100 ரூபாய்க்கு வாங்கிப் போட்டா பத்தாதா?’ என்பது தர்க்கத்துக்கு சரி. நடைமுறையில் இந்தக் கருத்து, ‘குழந்தைக்கும் கணக்குப் பார்க்கும்குற்றவாளி கூண்டில் நிறுத்தும். உண்மையில் யார் குற்றவாளி? ’வளர்ற பிள்ளைஎன முட்டி வரைக்கும் டைலரை அளவெடுக்கச் சொல்லி அப்பா-அம்மா தைத்துக்கொடுத்த மேல்சட்டையை முழங்கால் வரைக்கும் போட்டுக்கொண்டு அலைந்த இளம் பிராயத்தை நாம் கடந்து வரவில்லையா

உங்க பழங்கதை எல்லாம் உங்களோட வெச்சுக்குங்க... இதென்ன நம்ம ஊரா? சுத்தி இருக்குற புள்ளைங்களோட சேர்ந்து நம்ம புள்ளையும் வளரும்போது அதுக்குத் தக்கன ட்ரெஸ் பண்ண வேண்டாமா?’ என்ற கேள்வியில் உள்ள யதார்த்தத்தன்மையை நிராகரிக்க முடியுமா? பற்றிக்கொள்ள ஒரு கொம்பு கிடைக்குமா என காற்றில் அசைந்தாடும் ஒரு கொடியைப் போல, இந்த பொருளாதார ஏணியில் ஒரு படியேனும் மேல் எழும்பத் துடிக்கும் எளிய மக்கள், ஒரு வேட்டை மிருகத்தின் வேட்கையோடு இவ்வாழ்வை துரத்திச் செல்கின்றனர்

குடும்பம் என்பது எவ்வளவு தின்றாலும் செரித்துக்கொண்டே இருக்கும் விநோத மிருகம். அதன் வயிற்றில் எப்போதும் பூர்த்தியடையாத பெரும்பசியின் தீ கனன்று எரிகிறது. இதற்கு உணவிடுவதற்காக ஆண்கள் ஆயுள் முழுவதும் ஓடி ஓடி களைத்துப் போகின்றனர். வேலையின் களைப்பில் இன்னதென்று விவரிக்க இயலாத எரிச்சலும், கடுப்பும் அவ்வப்போது சூழும். ‘நாங்கள் நண்பர்களோடு குன்னூர் போனோம்; குலுமணாலி போனோம்என எவனாவது ஃபேஸ்புக்கில் ரெண்டு போட்டோ போட்டால் இந்த கடுப்பு ரெண்டு ஸ்பூன் அதிகரிக்கும். ‘நாலு நாள் லீவு போட்டுட்டு எங்கேயாச்சும் போகனும்என்று நாலு நாளைக்கு ஒருமுறை தோன்றத்தான் செய்யும். ஆனால் பணத்துக்கு எங்கே போவது

அகால விபத்துகளில் நண்பர்கள் உயிரிழக்கும்போது ஓரிரு நாட்கள் மனம் அலைபாயும். பார்க்கும்வேலை மீதான அவநம்பிக்கையும் பற்றற்ற மனநிலையும் வந்துவந்து போகும். ‘எதற்காக இந்த வேலை? யாருக்காக இப்படி பொழுதெல்லாம் இங்கே கிடந்து சாகிறோம்? நமக்கு சொந்தமானது என ஒரு நாளும் இல்லையா? நினைத்ததை செய்து வாழவே முடியாதா?’ என்றெல்லாம் சிந்திப்போம். ஆனால் அந்த வேலை தரும் வருமானம் இல்லை என்றால் அடுத்த மாதத்தை ஓட்ட முடியாது என்பது கண் முன்னால் இருக்கும் நிஜம்

பொருளாதாரம்தான் ஆண்-பெண் உறவின் நெகிழ்ச்சியை, அதன் விகிதத்தை தீர்மானிக்கிறது.  பொருளாதாரம் அதிகரிக்க, அதிகரிக்க... ஆண்-பெண் உறவின் நெகிழ்ச்சித் தன்மை குறைகிறது. அங்கு தனிமனித உணர்வு நிலை மேலோங்கி, விட்டுக்கொடுத்தல் பின்னுக்குப் போகிறது. மாறாக பொருளாதார ஏணியின் கீழ்வரிசையில் இருபோரிடம் விட்டுக்கொடுத்தல் இருப்பினும், அங்கு பொருளாதாரத்தை முன்னிட்டே சிக்கல்கள் ஏற்படுகின்றன. பாலின சமத்துவத்தின் முழுமை என்பது பொருளாதார சமத்துவத்தில்தான் சாத்தியம். நமது இதர பாகுபாடுகளை அப்படியே வைத்துக்கொண்டு பாலின சமத்துவத்தை எட்ட முடியாது.

- நன்றி, விகடன்


கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு