மானியங்களை வெட்டு



`மன்மோகன் சிங் ஆட்சிக்கும், மோடி ஆட்சிக்கும் என்ன வித்தியாசம் தெரியுமா?’

‘என்ன?’

`அது பயங்கரக் கொடூரமா இருக்கும். இது கொடூரமா, பயங்கரமா இருக்கும்.’

 -  வாட்ஸ்அப் ஃபார்வேர்டுபோலத் தோன்றினாலும் இந்த ஒப்பீட்டில் ஆழ்ந்த அரசியல் பொருள் உள்ளது. இவர்கள் ஒரே மரத்தின் கனிகள். தாராளமயம் என்ற அந்த மரத்தில் ப.சிதம்பரம், அருண் ஜெட்லி, மாண்டேக் சிங் அலுவாலியா என ஏகப்பட்ட கனிகள். எல்லா கனிகளின் உள்ளே இருப்பதும் ஆலகால விஷம் என்பதுதான் இதில் உள்ள அபாயம்.

இப்போது ரேஷன் மானியம் ரத்து, கேஸ் மானியம் ரத்து... என வரிசையாக அடுத்தடுத்து வரும் அறிவிப்புகள் அனைத்திலும் இவர்கள் அனைவருக்கும் பங்கு இருக்கிறது. மானியங்களைப் போட்டுத் தள்ளுவதில் இவர்களுக்கு அப்படி என்ன அலாதியான ஆர்வம்? ரேஷன் அரிசியில் அரை வயிற்றுக் கஞ்சி குடித்து உயிர்வாழும் ஒரு வயதான கிழவியின் வயிற்றில் அடிக்க இவர்கள் போட்டிப் போடுவது எதனால்?

ஏனெனில், ரேஷன் கடைகளை இழுத்து மூடுவது அருண் ஜெட்லியின் சொந்த முடிவு அல்ல. ‘மானிய வெட்டு’ என்பது உலக வர்த்தகக் கழகத்தின் நிபந்தனை. உலக வங்கியின் கொள்கை. இவர்கள்தான் கடந்த 25 ஆண்டுகளுக்கும் மேலாக ‘மானியங்களை நிறுத்துங்கள்’ என இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளை நோக்கி இடைவிடாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். இந்தியாவுக்கு வழங்கப்படும் கடன் உதவிகள் அனைத்தும் ‘மானிய வெட்டு’ என்பதை முன் நிபந்தனையாக வைத்தே வழங்கப்படுகின்றன. இந்தியாவில் மானிய விலையில் உணவுப் பொருள்களைக் கொடுத்தால், அவர்களுக்கு எங்கே வலிக்கிறது?

ஏனெனில், தாராளமயக்கொள்கைகளை இந்தியா ஏற்றுக்கொண்டுள்ளது. `இந்தியா ஒரு திறந்தவெளிச் சந்தை;இதில் யார் வேண்டுமானாலும் நுழைந்து வியாபாரம் செய்யலாம். இதற்குரிய சூழலை உருவாக்கித் தர வேண்டியது இந்திய அரசின் கடமை’ என்று சொல்லும் `காட்’ ஒப்பந்தத்தில் (GATT agreement) இந்தியா கையெழுத்துப் போட்டிருக்கிறது.
பன்னாட்டு நிறுவனங்களின் லாபம் அதிகரிக்க வேண்டுமானால் மானிய விலையில் பொருள்கள் விற்கப்படுவது நிறுத்தப்பட்டாக வேண்டும். அப்போதுதான் மக்கள் சந்தையை நோக்கி வருவார்கள். இதுதான் அடிப்படை. ஆனால், `மக்களுக்குச் சலுகை விலையில் எதையும் தரக் கூடாது. அவற்றை விலை கொடுத்து வாங்குவதற்குரிய ‘வாங்கும் சக்தி’யை மக்களிடம் வளர்த்தெடுக்க வேண்டுமே தவிர, மானியம் கொடுத்து மக்களைச் சோம்பேறியாக்கக் கூடாது’ என்று இதை இந்திய நடுத்தர வர்க்கத்தின் மனநிலைக்கு ஏற்றவாறு மாற்றியும் சொல்வார்கள்.

உண்மையில், `உணவு, கல்வி, சுகாதாரம் ஆகிய துறைகளில் மானியங்களை நிறுத்திவிட்டு தனியார் நிறுவனங்களையும் அனுமதிக்க வேண்டும். எல்லோரும் சமமாகப் பங்கேற்கும் களத்தை (level playing field) உறுதிசெய்து தர வேண்டியது அரசின் கடமை’ என்பதுதான் உலக வர்த்தகக் கழகத்தின் கருத்து. மக்கள் நலத் திட்டங்களை நிறைவேற்றுவது அரசின் கடமை இல்லையாம்; இவர்களுக்கு வர்த்தகம் செய்யும் சூழலை உருவாக்கித்தந்து மானியத்தை வெட்டுவதுதான் அரசின் கடமையாம். இதை ஒப்புக்கொண்டு நாம் தேர்வு செய்த அரசுகள் கையெழுத்திட்டுள்ளன.  
இந்தியாவைப் பொருத்தவரை மிகப்பெரிய அளவில் மானியம் வழங்கப்படுவது என்றால் அது பொது விநியோக முறையில்தான். ரேஷன் கடைகள் மட்டும் இல்லையெனில், இந்தியாவில் பட்டினிச் சாவுகள் எண்ணிப்பார்க்க முடியாத அளவுக்கு அதிகரித்துவிடும் என்பது பல்வேறு ஆய்வுகள் சுட்டிக்காட்டும் முடிவு. இந்தப் பொது விநியோக முறையை ஒழித்துக்கட்டுவதற்காக உலக வர்த்தகக் கழகம் 1990-களில் இருந்து பல்முனைத் தாக்குதலை நடத்தி வருகிறது.

1990-களுக்கு முன்பு இந்தியாவில் ரேஷன் அட்டைகளில் யாரும், எந்தப் பொருள்களையும் வாங்கிக்கொள்ளலாம் என்ற Universal Public Distribution System அமலில் இருந்தது. தாராளமயக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டபிறகு இதை Targeted Public Distribution System என இலக்கு நோக்கியதாக மாற்றினார்கள். வறுமைக் கோட்டுக்கு மேலே, கீழே எனப் பிரித்து வெள்ளை அட்டை, பச்சை அட்டை எல்லாம் கொண்டு வந்தார்கள். இதன்மூலம் பொது விநியோக முறை கணிசமாகக் குறைக்கப்பட்டது. இதை முற்றிலுமாக ஒழித்துக்கட்டும் வேலையை துரிதப்படுத்த மன்மோகன் சிங் அரசு உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைக் கொண்டு வந்தது.

இந்தச் சட்டத்தின்படி, வறுமைக்கோட்டுக்குக் கீழ் உள்ள ஒவ்வொரு இந்தியக் குடும்பத்துக்கும், கிலோ மூன்று ரூபாய் விலையில் 25 கிலோ அரிசி அல்லது கோதுமையைக் கொடுப்பதுடன், தரமான உணவுக்கான உத்தரவாதமும் வழங்கப்படும். கேட்பதற்கு நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால், அந்த வறுமைக்கோட்டை வரையறுப்பதில்தான் சிக்கலே. Barest minimum என்ற கருத்தின்படி இவர்கள் வறுமைக்கோட்டைக் கணக்கிடுகின்றனர். அதாவது இந்த உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டிருப்பதற்குத் தேவையான குறைந்தபட்ச அளவைச் சம்பாதித்துவிட்டால், அவர் வறுமைக்கோட்டைக் கடந்துவிட்டதாக அர்த்தம்.

இதன்படி நகர்ப்புறத்தில் ஒருவர் நாளொன்றுக்கு 29 ரூபாயும், கிராமப்புறத்தில் 23 ரூபாயும் சம்பாதித்தால் அவர் வறுமைக்கோட்டைத் தாவிக்குதித்துக் கடந்துவிட்டார் என்று பொருள். உடம்பில் உயிர் ஒட்டிக்கொண்டிருந்தால் போதுமா? கல்வி, மருத்துவச் செலவுகளுக்கு என்ன செய்வது? நல்ல உடை உடுத்த வேண்டாமா? ஒரு கண்ணியமான வாழ்க்கையை வாழ வேண்டாமா?
ஆனால், இது எதையும் கண்டுகொள்ளாமல், ஆடி அதிரடி ஆஃபர்போல ஒரே நாளில் ஏழைகளின் எண்ணிக்கையைக் கோடிக்கணக்கில் குறைத்து, வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்கு ரேஷன் பொருள்கள் கிடையாது என அறிவித்தது மன்மோகன் சிங் அரசு. இதன்பிறகு, வறுமைக்கோட்டுக்குக் கீழே உள்ள பிரிவினருக்காக ரேஷன் கடைகள் இயங்குவதையும் இவர்களால் சகித்துக்கொள்ள முடியவில்லை. அதை மூடுவதற்கான முதல்படியாக ‘உங்கள் பணம் உங்கள் கையில்’ என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. மானியம் பணமாகக் கணக்கிடப்பட்டு, உங்கள் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்படும். நீங்கள் ரேஷன் கடைகளில் சந்தை விலையில் பொருள்களை வாங்கிக்கொள்ள வேண்டும்.

சந்தை விலையில் மொத்தமாகப் பணம் கொடுத்து வாங்குவதற்கு ஏழைகளிடம் பணம் ஏது? ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் சந்தையில் 50 ரூபாய் விற்கிறது.  உங்கள் வறுமைக்கோடு அளவீட்டின்படி இரண்டு நாள் பட்டினி கிடந்தால்தான் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் வாங்க முடியும். இதற்கான மானியம் சில மாதங்கள் கழித்து வங்கிக்கணக்குக்கு வரும்வரை என்ன செய்வது?

இந்நிலையில்தான், உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில் மேலும் பல்வேறு அம்சங்களை இணைத்து பா.ஜ.க. அரசு தற்போது நாடு முழுவதும் அமல்படுத்தியுள்ளது. `ஃப்ரிட்ஜ், ஏ.சி வைத்திருந்தால், அரசு ஊழியராக இருந்தால், மாதம் 8,334 ரூபாய் சம்பாதித்தால் ரேஷன் பொருள்கள் கிடையாது’ எனப் பல அம்சங்கள் இதில் உள்ளன. கடந்த மூன்று ஆண்டுகளாக இதற்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்துவந்த தமிழக அரசு தற்போது சட்டத்தை ஏற்றுக் கொண்டுள்ளதால், தமிழ்நாடும் ஆதரவுப் பட்டியலில் இணைந்துள்ளது. அறிவிப்பு வந்து கெஸட்டிலும் வெளியிடப்பட்டபின்பு, ‘வதந்திகளை நம்பாதீர். தமிழ்நாட்டில் வழங்கப்பட்டுவரும் விலையில்லா அரிசி உள்ளிட்ட ரேஷன் மானியத் திட்டங்கள் தொடரும்’ எனச் சொல்கிறார் தமிழக உணவுத் துறை அமைச்சர் காமராஜ். கெஸட்டில் வெளியிடப்பட்டுள்ள ஓர் அறிவிப்பை வதந்தி என்கிறார் அமைச்சர். இன்னொரு பக்கம், ‘மானியம் தொடரும்’ என்கிறார். உண்மையில் இது சாத்தியமற்றது.

தற்போது தமிழ்நாட்டில் ஒரு கோடியே 90 லட்சம் ரேஷன் அட்டைகளுக்கு விலையில்லா அரிசி வழங்கப்பட்டு வருகிறது. இதைத்தவிர சர்க்கரை, பாமாயில், மண்ணெண்ணை, துவரம் பருப்பு, உளுந்தம் பருப்பு உள்ளிட்ட பொருள்களும் மானிய விலையில் வழங்கப்படுகின்றன. இந்தப் பொருள்களை வழங்குவதற்கு இத்தனை ஆண்டுகளாக மத்திய அரசின் ஒதுக்கீட்டைத்தான் மாநில அரசுகள் நம்பியிருந்தன.

உணவுப் பாதுகாப்புச் சட்டத்தைத் தமிழ்நாடு எதிர்த்து வந்ததால், தமிழ்நாட்டுக்கான மாதாந்திர அரிசி ஒதுக்கீடான 1.26 லட்சம் டன் அரிசியை இனி சந்தை விலையான ஒரு கிலோ 22.53 ரூபாய்க்குத்தான் வழங்க முடியும் என்று கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மோடி அரசு அறிவித்தது. அப்போது ஜெயலலிதா மரணம் தொடர்பான அரசியல்  குழப்பங்களில்  இது  கண்டுகொள்ளாமல் விடப்பட்டது. அந்த நவம்பரில் இருந்து இப்போது வரை சந்தை விலையில்தான் அரிசி வழங்கப்படுகிறது. இதுவே பெரிய நிதிச்சுமை. கடந்த மாதம் கொண்டுவரப்பட்ட ஜி.எஸ்.டி. சட்டத்தின் மூலம் மாநிலங்களுக்கான வருவாய் கணிசமாகக் குறையும். பிறகு எப்படி இவர்கள் ரேஷன் மானியத்தைத் தொடர முடியும்? மக்களின் கோபத்தை மட்டுப்படுத்துவதற்காக அமைச்சர் இப்படிச் சொல்கிறார். ஆனால், நடைமுறைச் சாத்தியம் இல்லை.

தற்போதைய நிலவரப்படித் தமிழக ரேஷன் கடைகளில் பாதிப் பொருள்கள் கிடைப்பது இல்லை. குறிப்பாக எண்ணெய் வகைகள், பருப்பு வகைகள் மாதத்தின் சில நாள்கள் மட்டுமே. அதுவும் குறைந்த அளவு மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்தத் தட்டுப்பாடு இனி அதிவேகமாக அதிகரிக்கும். ரேஷன் கடைகள் வாழ்ந்துகெட்ட வீட்டைப்போல பாழடைந்து போகும். ஏழைகளுக்குக் கிடைத்துவரும் அரை வயிற்று உணவையும் பிடுங்கும் இந்தக் கொடும் சட்டத்தின் பெயர் உணவுப் பாதுகாப்புச் சட்டமாம். ஏழைகளின் வயிற்றுக்குள் உணவு சென்றுவிடாமல் பாதுகாப்பதற்குப் பெயர்தான் உணவுப் பாதுகாப்பு என்று நினைத்துவிட்டார்கள்போல மன்மோகனும், மோடியும். 
ரேஷன் மானியம் மட்டுமல்ல... அடுத்த ஆண்டில் இருந்து கேஸ் சிலிண்டருக்கும் மானியம் இல்லை. ஏன் இப்படி ஒரே நேரத்தில் எல்லாவற்றையும் அவசரமாகக் கொண்டு வருகிறார்கள்? 2013 டிசம்பர் மாதம் இந்தோனேஷியா, பாலித் தீவில் உலக வர்த்தகக் கழக மாநாடு நடைபெற்றது. இதில் இந்தியா உள்ளிட்ட ஏழை நாடுகளுக்கு மானியங்களை வெட்டுவதற்கு மூன்று ஆண்டு கால அவகாசம் வழங்கியது உலக வர்த்தகக் கழகம். அந்தக் கெடு இந்த டிசம்பருடன் முடிகிறது.அதனால்தான் அதிவேகமாக மானிய வெட்டு நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளர். 
மக்களுக்கு வழங்கப்படும் மானியங்களை வெட்டும் இவர்கள், ஆண்டுதோறும் பன்னாட்டு நிறுவனங்களுக்குப் பல்வேறு பெயர்களில் வரிச் சலுகைகளை வாரி வழங்குகிறார்கள்.

``கடந்த 2005-06ம் ஆண்டு தொடங்கி 2013-14 வரையிலான ஆண்டுகளில் கார்ப்பரேட் நிறுவனங்களுக்குப் பல்வேறு பெயர்களில் வழங்கப்பட்டுள்ள வரிச்சலுகையின் மொத்த மதிப்பு 36 லட்சம் கோடி’’ எனக் குறிப்பிடுகிறார் பத்திரிகையாளர் பி.சாய்நாத். இவர் குறிப்பிடுவது மன்மோகன் சிங் ஆட்சிக் காலத்தை. இதன்பிறகு ஆட்சிக்கு வந்த மோடியின் தலைமையிலான பாரதிய ஜனதா அரசு இந்த கார்ப்பரேட் வரிச் சலுகையை மேலும் அதிகரித்துள்ளது. 2013-14 காங்கிரஸ் ஆட்சியில் 5.66 லட்சம் கோடியாக இருந்த வரிச் சலுகையை 2014-15-ம் ஆண்டில் 5.72 லட்சம் கோடியாக உயர்த்தியது பாரதிய ஜனதா ஆட்சி. இன்னும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது.

அது மட்டுமல்ல, பெருமுதலாளிகள் மீதான வருமான வரி, தொழில் வரி, சொத்து வரி போன்ற நேர்முக வரிகள் மிகவும் குறைவாக விதிக்கப்படுகின்ற நாடுகளில் ஒன்று இந்தியா. மாறாக சாதாரண மக்கள்மீது விதிக்கப்படும் சேவை வரி உள்ளிட்ட மறைமுக வரிகளைத் தொடர்ந்து உயர்த்திக்கொண்டே இருக்கிறார்கள்.

கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு வரிச்சலுகை கொடுப்பதன் மூலம் நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சி அடையும்; வேலைவாய்ப்பு பெருகி வழியும் என்றொரு வாதம் அடிக்கடி முன்வைக்கப்படுகிறது. இதில் ஏதேனும் உண்மை இருக்கிறதா?

பல்லாயிரம் கோடி ரூபாய் வரிச்சலுகைக் கொடுத்துச் சென்னை, ஸ்ரீபெரும்புதூரில் அரசு கொண்டுவந்த நோக்கியா நிறுவனம் 2,500 கோடி ரூபாய்க்கும் அதிகமாக வரிமோசடி செய்துவிட்டு, ஆயிரக்கணக்கான தொழிலாளர்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டு ஆலையை மூடிவிட்டுச் சென்றது. என்ன செய்ய முடிந்தது அரசால்? இந்திய வரிச் சலுகையின் பேர்பாதியை அனுபவிக்கும் தகவல் தொழிற்நுட்பத் துறையில் நாள்தோறும் வேலைபறிப்புச் செய்திகள் வந்துகொண்டே இருக்கின்றன. எனவே, கார்ப்பரேட் வரிச் சலுகையால் வேலைவாய்ப்பு பெருகும்; தொழில் வளர்ச்சி அதிகரிக்கும் என்பது பச்சையான ஏமாற்றுவாதம்.
வாஜ்பாய் தலைமையிலான பாரதிய ஜனதா ஆட்சியில் பொதுத்துறை நிறுவனப் பங்குகளைத் தனியாருக்கு விற்பதற்கு என ஓர் அமைச்சரவையே தனியாக வைத்திருந்தனர். இப்போதைய மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசோ, அரசின் செலவுகளைக் கட்டுப்படுத்துவதற்காக, ‘செலவு மேலாண்மை கமிட்டி’யை அமைத்துள்ளது. எதில் எல்லாம் மானியத்தை வெட்டலாம் என பரிந்துரைத்துப்பதுதான் இந்த கமிட்டியின் வேலையே.

மன்மோகன் சிங் தயங்கித் தயங்கி அமல்படுத்திய தனியார்மய, தாராளமயக் கொள்கைகளை வேகவேகமாக அமல்படுத்துகிறார் மோடி. இப்போது இந்த நாடு, ஒட்டக் கறக்கப்பட்ட பசுமாடு. இதற்கு மேலும் இதில் இருந்து பால் கறக்கவும், சுரக்கவில்லையெனில் அதன் மடியை அறுக்கவும் தயங்கமாட்டார்கள் ஆட்சியாளர்கள்!
நன்றி: ஆனந்த விகடன்

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்