உழைப்புச் சுரண்டலின் உச்சம்!


Barathithambi/Facebook: 

ஒரு தேநீர் கடையில் நின்றுகொண்டிருந்தேன். அருகில் நின்ற செக்யூரிட்டி ஒருவர் செல்போனில் பேசிக் கொண்டிருந்தார். ‘‘சார், நான் ஆறு ஐநூறு வாங்குறேன் சார். ஆயிரத்து ஐநூறு சேர்த்துப்போட்டு எட்டு ரூவாயா கொடுங்க சார்’’ என்று ஏக்கமாக கேட்டது அவர் குரல். எதிர்முனை சொன்ன பதில் என்னவெனத் தெரியவில்லை. ‘‘சரிங்க சார், பார்த்து செய்யுங்க சார்’’ என்று சொல்லி செல்போனை துண்டித்துவிட்டு, வெறித்துப் பார்த்தபடி நகர்ந்தார்.

எட்டாயிரம் அவருக்கு ‘எட்டு ரூபாய்’ என்னும் பெருந்தொகையாகத் தெரிகிறது. 1,500 ரூபாய்க்காக ஏங்கி கெஞ்ச வைக்கிறது. நேற்று சலூனில், ‘‘ராத்திரி 100 ரூவா கொடுத்தா காலையில பத்தலங்குறா... என்னதான் பண்றதுன்னுத் தெரியலை’’ என்று சலூன்காரரிடம் புலம்பினார் காத்திருந்த ஒருவர்.

நூறுக்கும், இருநூறுக்கும், ஆயிரத்துக்கும், ஐயாயிரத்துக்கும் அல்லாடும் பல லட்சம் மக்கள் நம்மை சூழ்ந்திருக்கிறார்கள். ஒவ்வொரு குடும்பத்தையும் பொருளாதார நெருக்கடி தாங்க முடியாத துன்பமாக சூழ்ந்திருக்கிறது. வீட்டு வாடகை கொடுக்கவும், சமைத்து உண்ணவுமே படாதபாடு பட வேண்டியிருக்கிறது. நினைத்ததை வாங்கி சாப்பிட முடியவில்லை; நல்ல துணிமணிகள் அணிய முடியவில்லை; பிள்ளைகள் கேட்டதை வாங்கித் தர முடியவில்லை; நோய்க்கு சிகிச்சை பார்த்துக்கொள்ள பணமில்லை... வாழ்வின் சிறு சிறு தேவைகளுக்கும் ஏங்கித் தவிக்க வேண்டியிருக்கிறது. பசித்த வயிற்றுடன் கடை வாசலில் நின்று பிஸ்கட் கேட்டு அடம் பிடிக்கும் பிள்ளையை, அடித்து இழுத்துச் செல்லும் தகப்பனின் மன வேதனை, மிக கொடியது.

இந்த கருணையற்ற முதலாளித்துவ பொருளாதாரம், பல கோடி ஏழைகளை அன்றாடம் காவு வாங்குகிறது. கூடுதலாக ஓரிரு ஆயிரங்கள் சம்பாதிப்பதற்காக நாள் ஒன்றுக்கு 12 மணி நேரத்துக்கும் அதிகமாக வேலைப் பார்க்க வேண்டியிருக்கிறது. உழைப்பு, உழைப்பு... கொடூர உழைப்பு. ஓர் இயந்திரத்தின் உதிரி பாகத்தை விட அதிகமாக மனிதர்கள் உழைக்கிறார்கள். ஆனால் முதலாளிகளோ... லாபத்தின் சிறு பகுதியையும் விட்டுக்கொடுக்கத் தயாரில்லை. முந்தைய ஆண்டின் லாப விகிதத்தில் சிறு தொய்வு ஏற்பட்டாலும், முன்பை விட வெறிப்பிடித்த வேகத்தில் உழைப்பு சுரண்டலை கட்டவிழ்த்துவிடுகின்றனர்.

காலம் முன்னேறிவிட்டது. அறிவியல் வளர்ந்துவிட்டது. கல்வியறிவு பெருகிவிட்டது. என்ன செய்ய? மனிதனை கொடூர உழைப்பில் இருந்து விடுவிக்க எதுவும் வரவில்லையே? சிந்தித்தால், அப்படி தேவனின் வருகை போல எதுவும் சுயம்புவாக வருவதில்லை. நாம்தான் நமது போராட்டங்கள் மூலம் அத்தகைய தீர்வை நோக்கிச் சென்றாக வேண்டும். முதலாளிகள் பலம் மிக்கவர்கள்தான். அவர்களிடம் அதிகாரம் உள்ளது. படைபலமும், பணபலமும் உள்ளது. எனினும் அவர்கள் மிகச் சிலர். எதுவும் இல்லை எனினும், ஏழைகள் எண்ணற்றோர்!
Anton Prakash/Facebook:

வேறொரு கோணத்தில் இதை பார்க்க விரும்புகிறேன். 15 - 20 வருடங்களுக்கு முன்னால், வேலை கிடைப்பதென்பது குதிரைக் கொம்பு. "வேலையில்லா பட்டதாரி" என்ற பதம் சிறுகதைகளில் இருந்து சினிமா வரை பயன்படுத்தப்படும். திறந்துவிடப்பட்ட சந்தைப் பொருளாதாரம் வேலைகளை கொண்டு வந்திருப்பதை மறுக்க முடியாது. பண வீக்கம் அதிகம் காரணமாக விலைவாசி அதிகரிப்பு பலமாக அழுத்துவது உண்மைதான். அதற்கான தீர்வு போராட்டங்கள் அல்ல, மாறாக புதுமையாக்கல் முயற்சிகள் என்று சொல்வேன்.

புதுமையாக்கலுடன் இன்னொற்றும் தேவை.

இன்றைய நாளில் டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு அதர பாதாளத்தில் விழுந்தபடி இருக்கிறது. இந்திய பொருளாதார வளர்ச்சி விகிதத்தை விட அமெரிக்க பொருளாதாரம் தொய்வாகவே தொடர்ந்து இருக்கிறது. பின்னர் ஏன் இது நடக்கிறது ? எரிபொருள் பற்றிய எந்த திட்டமும், தொலைநோக்கும் இல்லாமல் அமெரிக்காவையும் விட அதிக அளவில் எண்ணெய் தாகத்தில் இருக்கிறோம். எண்ணெய்க்கான சந்தை டாலரில் என்பதால் கரன்சி பரிவர்த்தனை தீயாக பறந்து ரூபாயின் மதிப்பை வீழ்த்தி பணவீக்கத்தை அதிகரித்தபடி இருக்கிறது.

பிரச்சனை இல்லை என்று சொல்லவில்லை. அதற்காக நீங்கள் சொல்லும் காரணமும், அதற்கான தீர்ப்பும் சரியானதாக இல்லை என நினைக்கிறேன்.


Barathi Thambi/Facebook:
இப்போது வேலைவாய்ப்பு அதிகம் உள்ளது என்பதும் பத்திரிகைகளைத் திறந்தால் 'வேலைக்கு ஆட்கள் தேவை' விளம்பரங்கள் எப்போதும் நிரம்பியிருப்பதும் உண்மைதான். ஆனால் அந்த வேலைகளுக்கான சம்பளம் மிக மிக சொற்பம்; அதற்காக பார்க்க வேண்டிய வேலையோ மிக, மிக அதிகம். சிறு முதலீட்டில் தொழில் நடத்துபவர்களிடம் கேட்டால் மிகக் குறைந்த அளவில் லாபம் பார்ப்பதற்கே எவ்வளவு அதிகமாக உழைக்க வேண்டியிருக்கிறது என்பதை அனுபவ‌மாக சொல்வார்கள்.

கூடங்குளம் அணுமின் நிலையம் முதல் நோக்கியா, ஃபோர்டு கார் கம்பெனி, செயிண்ட் கோபியண்ட் கண்ணாடி கம்பெனி என பல பெரிய திட்டங்கள் இங்கு கொண்டு வரப்படும்போதும் அரசும், அந்த நிறுவனங்களும் முதலில் போடும் கூப்பாடு 'வேலைவாய்ப்பு' என்பதுதான். பல்லாயிரம் பேருக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் வேலைவாய்ப்பு என அவர்கள் சொல்வது எத்தனை மோசடியானது என்பதை இன்று நோக்கியாவில் பணிபுரிபவர்களிடம் கேட்டால் அறிந்துகொள்ளலாம். 10 மணி நேரத்துக்கும் மேலான கொடூரமான உழைக்கு 6 ஆயிரமும், 7 ஆயிரமும்தான் அவர்களுக்கு சம்பளம். ஆகவே மலிவான கூலியில் மனித வளம் சுரண்டப்படுவதாக சொல்லலாமேத் தவிர, இதை வேலைவாய்ப்பு என்று வரையறுக்க முடியாது. எல்லை கடந்து வரும் மூலதனம், எங்கெல்லாம் அதிக லாபம் கிடைக்கிறதோ, அங்கு தன் கடையை விரிக்கிறது. தமிழ்நாட்டில்; இந்தியாவில் வியாப்பித்திருக்கும் பன்னாட்டு மூலதனமும் இப்படிப்பட்டதே.

புதுமையாக்கல் முயற்சிகள் மக்களின் வாழ்க்கை பாரத்தை குறைத்திருக்க வேண்டும். அறிவியல் என்பதன் மெய்ப்பொருள் அதுவாகவே இருந்திருக்க வேண்டும். மாறாக அறிவையும், அறிவியலையும் லாபம் பார்க்கும் சந்தையாகவே நிறுவனங்கள் மாற்றி வைத்திருக்கின்றன. இதில் நிறுவனங்கள் என சொல்லும்போதே அதனுடன் இந்த கேபிட்டலிச அரசமைப்பும் இணைந்துதான் செயல்படுகிறது என்பதையும், கம்பெனிகள் மட்டும் தனித்தியங்குவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தவிரவும், புதுமையாக்கல் முயற்சிகள் என்பவை சீர்திருத்த நடவடிக்கைகள் போன்றவை. அவற்றால் தற்காலிக பலன்கள் கிடைக்கும். அது நீடிக்காது. இங்கு Operating System என்பதே கோளாறாக இருக்கிறது. இதில் ஸ்பேர் பார்ட்ஸை மாற்றுவதால் பலன் இல்லை. எனில் ஆபரேட்டிங் சிஸ்டத்தையே எப்படி மாற்றுவது? கோரிக்கை வைத்து, மனு கொடுத்து சாதிக்க முடியாது. போராடிதான் மாற்ற முடியும். அதுவொன்றே ஏழைகளுக்கு எஞ்சியிருக்கும் ஒரே வழி.

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

கோயில்கள் யாருக்கு? - இந்து சமய அறநிலையத் துறையின் வரலாறு