மம்சாபுரம் நிலாவும்,சீலப்பாடி மகாலட்சுமியும்...
//பிறந்தது மம்சாபுரம் என்கிற பட்டிக்காட்டில். வசிப்பது லண்டன் பட்டணத்தில்.//
-இது பதிவர் நிலாவின் புரொஃபைலில் இருக்கும் வார்த்தைகள்.மம்சாபுரம் போலவே சீலப்பாடி என்ற சிறிய கிராமத்தில் பிறந்த ஏழை தலித் பெண் ஒருவரின் வாழ்நிலை எப்படிப்பட்டதாக இருந்திருக்கும் என்பது 'ஆன்ம திருப்திக்காக நிலாச்சாரல் நடத்தும்' ஒரு பெண் எழுத்தாளருக்கு தெரியாமல் போனது ஆச்சர்யம்தான்.(இந்த பஞ்சாயத்துப்பற்றி தெரியாதவர்கள் பதிவர் செந்தழல் ரவி எழுதிய இதையும்,,பதிவர் நிலா அதற்கு விமர்சனமாம எழுதிய இதையும் படிக்கவும்..)
==>இந்த இடத்தில் மம்சாபுரம் என்பது உண்மையிலேயே குக்கிராமம்தானா..?அந்த கிராமத்தில் உங்கள் இளம்பிராயத்தை கழித்தீர்களா..? என்ற கேள்விகளை நிலாவைப் பார்த்துக் கேட்க வேண்டியிருக்கிறது.ஏனெனில் இப்போதெல்லாம், தசம ஆண்டுகளுக்கு ஒருமுறை தனது தாத்தா,பாட்டி வாழ்ந்த கிராமத்தை எட்டிப்பார்க்கும் பலபேர்,'நான் பொறந்தது ஒரு பட்டிக்காடு..' என்று சொல்லிக்கொள்வது ஒருவித நாகரீகமாகிவிட்டது.ஒருவர் பட்டிக்காட்டில் பிறந்தவரானால், அவர் பணக்கார குடும்ப அங்கத்தினராக இருந்தாலும் கூட, ஒரு ஏழை தலித் பெண்ணின் வாழ்க்கையை வெகு எளிதாக புரிந்துகொள்ள இயலும்.ஆனால் நிலாவின் இந்த எழுத்திலிருந்து அவருக்கு அவ்வகையான சிந்தனை இருப்பதாக தெரியவில்லை.அதனால்தான் மம்சாபுரத்தை வம்புக்கு இழுக்க வேண்டியிருக்கிறது.
==>//எப்படிப்பட்ட உதவி நீண்ட நாள் நிலைத்திருக்கும் என்பதில் நாம் தெளிவாக இருக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான எண்ணம்//
இதுவும் பதிவர் நிலாவின் கருத்துதான்.உதவி செய்வதன் நோக்கம் துன்பப்படுவோரின் கண்ணீரைத் துடைப்பதாக இருக்க வேண்டுமே ஒழிய,உதவியின் ஆயுள் எவ்வளவு காலமிருக்கும் என்பதுபற்றி யோசிப்பது வடிகட்டிய அயோக்கியத்தனம் மட்டுமல்ல...வக்கிரமும் கூட.சாலையில் அடிபட்டு ஒருவர் உயிருக்குப் போராடுகிறார் என்றால் ,'இவன் பொழச்சு வந்தா எத்தனை நாள் உயிரோட இருப்பான்..' என்று உன்னிகிருஷ்ண பணிக்கரிடம் ஜோஸியம் பார்த்துவிட்டு வந்துதான் உதவுவீர்கள் போலும்.அப்படி எதிர்பலன் எதிர்பார்த்து செய்யப்படுவது உதவியல்ல...வர்த்தகம்.இதைவிட, உங்கள் வார்த்தைகளிலேயே நீங்கள் முரண்படுகிறீர்கள் என்பதையும் சற்று கூர்ந்து கவனியுங்கள்.கல்வி என்பது நீண்டகால பயனுள்ள விஷயம்தானே...?மகாலட்சுமி என்ற அந்த ஏழைப் பெண் படித்தால் அந்த குடும்பம் தலை நிமிர்வதோடு,அவளது வாழ்க்கையும் அர்த்தமுள்ளதாக ஆகும் என்பதில் உங்களுக்கு வந்த குழப்பம்தான் என்ன...?அல்லது பி.எட்., படிப்பைவிட மென்பொருள் தரக்கட்டுப்பாட்டு ஆலோசகர் பணிதான் நீண்ட காலத்திற்கு நிலைத்திருக்கும் என்பது லண்டன் கற்றுத்தந்த பாடமா...?
==>//பசிப்பவருக்கு மீனைக் கொடுப்பதை விட மீன் பிடிக்கக் கற்றுக் கொடுத்தல் நலம் அல்லவா? //
அதெல்லாம் சரிதான் தாயி...பசியால் துடிப்பவனுக்கு முதலில் ஒரு துண்டு மீனைக் கொடுத்து அந்த வேளை பசியாற்றுங்கள்.அப்போதுதான் நீங்கள் மீன் பிடிக்கும் டெக்னிக்கை கற்றுத்தரும்போது அதைக் கற்றுக்கொள்வதற்கான சக்தியாவது அவனுக்குக் கிடைக்கும்.( நேரடியாகவும் உதவாமல்,மறைமுகமாகவும் உதவாமல் ,உதவும் நபர்களையும் குழப்பும் சிலபேர் இந்த பழமொழியை சொல்லி செய்யும் அளப்பரை சாரி....கொஞ்சம் ஓவர்...).பச்சையாகவோ,கொச்சையாகவோ சொன்னால், நீங்கள் சொல்வது, அம்மணமா நிக்கிறவனுக்கு துணி நெய்ய சொல்லிக்கொடுத்த மாதிரி இருக்கிறது.
==>//நாளைக்கே அவளுக்குக் காதல் தோல்வி என்றால் இதே முயற்சியில் அந்தப் பெண் இறங்க மாட்டாளா?//
மகாலட்சுமி என்ற அந்த பெண், தொடர்ந்து படிப்பதற்கு அவரது பொருளாதாரம் இடம்கொடுக்கவில்லை.அதனால் அவர் கல்லூரியில் பாதியிலிருந்து விலக்கப்பட்டிருக்கிறார்.இதற்கும் அந்த பெண்ணின் நடத்தையோடு சம்பந்தப்படுத்தி நீங்கள் சொல்லியிருக்கும் வார்த்தைகளுக்கும் என்ன தொடர்பு என்பது விளங்கவில்லை.
==>//உணர்ச்சிவசப்பட்டு பணத்தைத் தருவது உண்மையில் உதவியா அல்லது தவறான முன்னுதாரணமா என்பதை சற்றே சிந்தித்தல் நலம்.//
உணர்ச்சிவசப்பட்டு உதவுவது மட்டுமல்ல...உணர்ச்சிவசப்பட்டு அதை தடுப்பதும் கூட தவறான முன்னுதாரணமாக இருக்கும் என்பதையும் தாங்கள் சற்றே சிந்தித்தல் நலம்.
==>//சுமார் 50 சிறுகதைகளும் ஒரு நாவலும் பல கட்டுரைகளும் எழுதி இருக்கிறேன்//
ஒரு படைப்பாளனுக்கு சமூகத்தின் அடிநாதமான பிரச்னைகள் ஓரளவுக்கேனும் தெரிந்திருக்க வேண்டும்.அப்போதுதான் உண்மையான உணர்வோடு எழுத இயலும்.மம்சாபுரம் என்ற குக்கிராமத்தில் பிறந்த நிலாவால், தன்போன்றே சீலப்பாடி என்ற குக்கிராமத்தில் பிறந்த சக மனுஷி மகாலட்சுமியின் துயரத்தை உணர முடியாதது ஏனோ...?
==>ஒரு வித shock value-விற்காக மனம்போன போக்கில் எழுதும் ஒருசில எழுத்தாளர்களைப் போல வித்தியாசம் விரும்பி எழுதியதாகவே நீங்கள் எழுதியதை எடுத்துக்கொள்ள வேண்டியிருக்கிறது.
































