கடவுளின் புனைப்பெயர்!

SC NO 8
EXT / DAY / BUS STOP

ஹீரோயின் மினி பஸ்ஸில் இருந்து இறங்குவது. அதன் மறைவில் இருந்து ஓர் இளைஞன் ஹீரோயினை நோக்கி வேகமாக வருவது. அப்போது ஒரு சைக்கிள் ஒற்றையடிப் பாதையில் இருந்து வருவது. ஹீரோயின் “சுப்பையா... நின்னு” என்பது. சைக்கிளை ஓட்டிச் செல்லும் சுப்பையா ஒரு காலை கீழே ஊன்றியபடி நிற்பது. ஓடிச்சென்று கேரியரில் ஏறி அமர்ந்துகொண்டு “ம்.. சீக்கிரம் போ” என்பது. அவர் பயத்துடன் “என்னம்மா.. நீங்கப் பாட்டுக்கும் ஏறிட்டீங்க..” என தயங்குவது. “போன்னு சொல்றேன்ல” என அவள் குரலை உயர்த்தியதும் சைக்கிள் கிளம்புவது. சுப்பையா பின்புறம் திரும்பிப் பார்க்க அங்கே அவளையேப் பார்த்துக்கொண்டு அந்த இளைஞன் நிற்பது.

------Cut-------

சம்பந்தம் கடுப்பாக டி.வி.யை நிறுத்திவிட்டு நரைத்துப்போன நெஞ்சு முடியை கையால் தடவிக்கொண்டார். இளம் பச்சை நிற தேங்காய்ப்பூ துண்டு அவர் தேகத்தை மறைத்துக் கிடந்தது. கையில் புகைந்த சுருட்டுப் புகை முகத்துக்கு நேராக சுற்றி சுற்றி வந்தது. கடும் கோபத்தில் இருந்த அவரது உதடுகள் ‘சுப்பையா’ என்ற பெயரை உச்சக்கட்ட கோபத்துடன் முணுமுணுத்தன. சனியன் பிடித்த டி.வி. எதைத் திறந்தாலும் அதையே போட்டுத் தொலைக்கிறான். அதுவும் அந்த ஹீரோயின் சைக்கிளை விட்டு இறங்கியதும் இளைஞனை நோக்கி திரும்பும் காட்சியில் அவர் முகத்தை குளோஸ்-அப்பில் வைத்து அந்த முகத்தின் மீதுதான் ‘திட்டம்’ என டைட்டிலே போடுகிறார்கள். அதைப் பார்க்க பார்க்க அவருக்கு மேலும், மேலும் கடுப்பு வந்தது.

சம்பந்தத்தால் நான்கு நாட்களாக ஊருக்குள் தலைகாட்ட முடியவில்லை. அவர் பிறந்து 51 வருடங்களாகிறது. இத்தனை வருடங்கள் கழித்து ஒரு சினிமாவின் மூலமாக, அதுவும் மூன்றே மூன்று காட்சிகளில் தனது சாதி மாற்றப்பட்டுவிடும் என அவர் நினைத்துக் கூட பார்க்கவில்லை. தான் நூதனமாக ஏமாற்றப்பட்டதாகவும், ஸ்கெட்ச் போட்டு அவமானப்படுத்தப்பட்டதாகவும் உணர்ந்தார். அதுவும் அடுத்த வாரம் சித்திரா பவுர்ணமி திருவிழாவை வைத்துக்கொண்டு இப்போது இப்படி நடந்ததுதான் அவரை அதிகம் ஆத்திரப்படுத்தியது. வெளியில் போனால் தெரிந்தவன் துக்கம் விசாரிக்கிறான். தெரியாதவன் நக்கல் அடிக்கிறான். இத்தனை நாட்களாக சேர்த்து வைத்திருந்த கௌரவமும், பெருமையும் ஒரே நாளில் காலாவதியாகிவிட்டதைப் போல் உணர்ந்தார்.

உண்மையில் அவர் மனதில் ஏதேதோ திட்டம் இருந்தது. படம், சரியாக சித்திரா பருவத்துக்கு ஒரு வாரம் முன்பாக ரிலீஸ் ஆகப்போவது தெரிந்துவிட்டதால் சரியான சந்தோஷத்தில் இருந்தார். “ ‘திட்டம்’ புகழ் கலைப்பேரொளி சம்பந்தம் நடிக்கும் வள்ளித் திருமணம் நாடகம்” என்று போஸ்டர் போடுவதாகக் கூட யோசனை இருந்தது. வெற்றிவேல் பிரஸ்ஸில் கொடுத்தால் நாலு கலரில் அடித்துத் தருவான். சுத்துப்பட்டு ஊர் எல்லாம் ஒட்டிவிட்டால் இந்த வருட பருவத்துக்கு சம்பந்தம்தான் கிங். எத்தனை வருடங்களுக்குதான் புதுக்கோட்டை ‘சாந்தி நாடக கம்பெனிக்காரன்’ தரும் துவைக்காத ஜிகினா டிரெஸ்ஸைப் போட்டுக்கொண்டு ‘மானைப் பார்த்தாயா, புள்ளி மானைப் பார்த்தாயா, இங்கு தப்பி வந்த புள்ளிமானைப் பார்த்தாயா?’ என்று டயலாக் பேசிக்கொண்டே இருப்பது? அதுவும் போன மூன்று வருடங்களாக வள்ளியையும், தெய்வானையையும் பார்க்க சகிக்கவில்லை. எத்துப்பல்லுடன் சிரித்தபோது வள்ளி, வில்லியாக தெரிந்தாள். அந்த லட்சணத்தில் அவர்களுக்கு முந்தின நாளே தேவர் மெஸ் பிரியாணி, காமாட்சி மெஸ் மீன் பொரியல்.. என வக்கனையாய் சாப்பாடு வேறு.

சம்பந்தத்தம் பதினெட்டு வருடங்களாய் வள்ளி திருமணத்தில் முருகன் வேடம் ஏற்று கலைச்சேவை ஆற்றி வருகிறார். கிளிண்டன் காலத்துக்கு முன்பிருந்து இப்போது ஒபாமா வந்துவிட்ட பின்னரும் அவர்தான் முருகன். வள்ளிகள் மாறலாம். தெய்வானைகள் மாறலாம். என்றென்றும் முருகன் அவர்தான். மேலக்கோட்டையின் அதிகாரப்பூர்வ ஊர் நாட்டாமைகளில் சம்பந்தமும் ஒருவர் என்பதால் முருகனாய் நடிக்கும் வாய்ப்பை யாரும் வழங்காமலேயே எடுத்துக்கொண்டார். அதன்பொருட்டு, ‘வீட்டுல ஒத்தை பொண்டாட்டியை வெச்சு குடும்பம் நடத்த வக்கில்ல.. இதுல இவ்வொளுக்கு ரெண்டு பொண்டாட்டி வேற’ என்ற மனைவியின் கடுங்குத்தல் பேச்சுக்களையும் பெருந்தன்மையோடு ஏற்றுக்கொண்டார்.

ஒவ்வொரு வருடமும் பருவத்துக்கு முந்தைய வாரத்தில் சம்பந்தத்தின் போக்கே மாறிவிடும். புகை, மது, மாது, மாமிசம் எதுவும் கிடையாது. ‘என்ன முருகா..’ என்றாலே டீ வாங்கித் தருவார். சாயுங்கால நேரத்தில் நாலு பையன்கள் சேர்ந்து சம்பந்தத்தை பத்து தடவை சுற்றி வந்து ‘முருகா, முருகா’ என்று கூவி கடை சாத்துவதற்குள் ஒரு குவார்ட்டருக்கு தேத்தி விடுவார்கள்.

‘‘வருஷம் முச்சூடும் மூச்சு முட்ட திங்கிற, குடிக்கிற... இந்த ஒரு வாரம் மட்டும் என்ன பக்தி பொத்துக்குது?” என்று எவரேனும் கேட்டால் ‘‘என்னதான் வேஷம் போட்டாலும் சாமியா நடிக்கிறோம். அதுக்கு உண்டான மரியாதையைக் குடுக்கனும்ல...” என்பார். அவரது கட்டுப்பாடு நாடகம் முடிந்த மறுநாளே நட்டுக்கொள்ளும். தெற்கே இருக்கும் அவரது தென்னந்தோப்பில் நல்ல தித்திப்பு இளநீர்களாகப் பார்த்து வெட்டி, அதில் பலவித டாஸ்மாக் அயிட்டங்களையும் ஒன்றாக கலந்தடித்து சாயுங்காலம் வரைக்கும் குடித்து தீர்ப்பார். முந்தின நாள் இரவுவரை அவரிடம் குடி கொண்டிருந்த முருகன் காலையிலேயே எக்ஸ்பயரி ஆகியிருப்பான்.

இவ்விதமான சம்பந்தத்தின் நீண்ட நெடிய கலைச்சேவையில் ஒரே பிரச்னை, கீழக்கோட்டைக்காரர்கள்தான். எண்ணிக்கையில் மேலக்கோட்டையை விட கீழக்கோட்டை குறைந்த தலட்டுக்கட்டுக்களைக் கொண்ட சிறிய ஊர்தான். ஆனால் பஞ்சாயத்துக்கு ஒன்றும் குறைவில்லை. இரு ஊர்களுக்கும் இடையே ஒவ்வொரு வருடமும் பிரதி மாதம் சித்திரை மற்றும் ஆவணியில் இரண்டு சண்டைகள் வரும். ஒன்று மேட்டூரில் தண்ணீர் திறந்துவிடும்போது கீழக்கோட்டை வழியாக வரும் சன்னதி வாய்க்காலை அவர்கள் அடைத்துக்கொள்கிறார்கள் என்பது. இரண்டு, வள்ளித் திருமணம் நாடகத்தில் ‘வள்ளிக்கு மேக்-அப் சரியில்லை’ என்பது மாதிரி மொக்கையான காரணத்தைக் கண்டுபிடித்தேனும் சண்டைப் பிடித்துவிடுகிறார்கள் என்பது. தண்ணீர் பிரச்னை என்பது மொத்த ஊருக்கும் சொந்தமானது. அதை சமாளித்துவிடலாம். நாடகத்தைப் பொருத்தவரை அது மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக தன்னுடன் சம்பந்தப்பட்டது என்றே சம்பந்தம் கருதினார். இதன்பொருட்டு சிலபல பகைகளையும் கடந்த காலத்தில் கீழக்கோட்டையுடன் வளர்த்து வைத்திருந்தார். ஆனால் அந்த கீழக்கோட்டைக்காரன் ஒருவனிடம் தான் சரணடைய நேரும் என சம்பந்தம் ஒரு போதும் நினைத்தது இல்லை.
****
சரியாக போன பருவம் முடிந்த இருபதாவது நாள் கீழக்கோட்டையில் கடும் பரபரப்பு. தஞ்சிராயர் பேரன் திருமூர்த்தி சினிமா டைரக்டர் ஆகி தனது முதல் பட ஷூட்டிங்கை ஊரைச் சுற்றியே நடத்தத் தொடங்கியிருந்தான். சுற்றி முப்பது கிலோமீட்டருக்கு சினிமா தியேட்டர் கூட இல்லாத ஊரில் இருந்து ஒருவன் சினிமா டைரக்டர் ஆகிவிட்டான் என்றால் சும்மாவா? சுத்துப்பட்டு ஊரே திரண்டு வந்து வேடிக்கைப் பார்த்தது.

இந்த இடத்தில்தான் சம்பந்தம் எண்டர் ஆகிறார். அவருடைய ஆசை எல்லாம் ‘இதைவிட்டால் வேற வாய்ப்பே கிடைக்காது. எப்படியாவது ஒரு சீனிலாவது இந்த சினிமாவில் தலைகாட்டிவிட வேண்டும்’ என்பதாக இருந்தது. ஆனால் கீழக்கோட்டைக்காரனிடம் எப்படிப் போய் நிற்பது? தன்மானம் தடுக்க, கலை ஆர்வம் முடுக்க... அப்போதுதான் காற்றில் வந்து காதில் நுழைந்தது அந்த சேதி. சம்பந்தத்தின் நாடக சகாவும் கடந்த சில ஆண்டுகளாக வள்ளி திருமணத்தில் பபூன் வேடம் ஏற்று கலக்கி வருபவருமான சமத்தலிங்கம்தான் அந்த சேதியை அவரது காதில் ஓதினான்.

‘‘அறுப்புக்கு ரெடியா இருக்குற நெல்லு வய வேணுமாம். ஹீரோயினு டிராக்டரை ஓட்டியாந்து வயலுக்குள்ள உட்டு ஏத்துமாம். உன் வயலைத் தர்றியா மாமா?”

பின்ன தராமல்? அதைவிட சிறந்த வாய்ப்பு அவருக்கு ஒருபோதும் கிடைக்காது. விறுவிறுவென கீழக்கோட்டைக்குப் போனார்.

‘‘நம்மகிட்ட நாலு ஏக்கர் தாழடி ‘என்னை அறுத்துக்க’ன்னு ரெடியா நிக்கிது தம்பி. வாங்க, வந்து நல்லா படம் பிடிங்க. நம்ம பிள்ளைவ இவ்வளவு தூரம் முன்னேறி வந்திருக்குதுவொண்ணா நம்மதானே தம்பி உதவனும். என்ன நான் சொல்றது?” சம்பந்தத்தின் பேச்சை இயக்குநர் கொஞ்சம் நம்பாதது போல் தெரிந்தது.

‘’காச பத்தி யோசிக்கிறியளா... அதெல்லாம் ஒண்ணும் கவலப்படாதிய.. நீங்க வாங்க, எல்லாத்தையும் நான் பாத்துக்குறன். டிராக்டர் கூட நம்மளுதே இருக்கு”

ஒரு கோழி தானாகவே மசாலா தடவிக்கொண்டு கொதிக்கும் எண்ணெயில் குதிக்க அனுமதி கேட்டால் யார் என்ன செய்ய முடியும்? ஆனால் இப்போது இயக்குநரின் டவுட் எல்லாம் ஒன்றே ஒன்றுதான். ‘‘அதுசரி... ஷூட்டிங்குக்கு அறுப்பு வய தேவைன்னு உங்களுக்கு எப்படித் தெரியும்?” சம்பந்தம் முகத்தில் இன்ஸ்டண்ட் பெருமிதமும், அதற்கு காரணமான சமத்தலிங்கம் முகமும் வந்து போயின. ‘பய நடிக்கிறது பபூனா இருந்தாலும் ஹீரோ கணக்காதான் காரியம் பண்றான்’ என்று நினைத்துக்கொண்டார்.

‘‘எங்களுக்கும் ஆளுங்க இருக்காய்ங்கல்ல தம்பி..” சொல்லிவிட்டு வெற்றிப் புன்னகையுடன் கிளம்பினார். அடுத்த நாளே இயக்குநர் வந்து லொக்கேஷன் பார்த்துவிட்டுச் செல்ல, இந்த இடைவெளியில் மேலும் பல ரகசிங்களை அறிந்து வந்திருந்தான் சமத்தலிங்கம். அதில் முக்கியமானது இயக்குநர் திருமூர்த்திக்கு ஓல்டு காஸ்க்கை இளநீரில் கலந்து அடிப்பதுதான் பிடிக்குமாம். இந்த ஒரு விஷயம் போதாதா, பிக்-அப் பண்ண? அன்றைய இரவு சம்பந்தத்தின் தோப்பில் சில தேங்காய்கள் இளம் வயதிலேயே உயிரிழந்தன. இளநீரின் சுவையுடன் ரம் அடித்த இயக்குநரின் மூன்றாவது ரவுண்டில் சம்பந்தத்தின் விருப்பத்தை சமத்தலிங்கம் பகிரங்கப்படுத்தினான்.

‘‘என்னாங்க நீங்க? இதுக்குப் போயி தயங்குறீங்க.. பக்கத்துப் பக்கத்து ஊருக்காரங்க.. எனக்காக நீங்க எவ்வளவு பண்றீங்க.. இதைக்கூடப் பண்ணமாட்டனா?”

அந்த காரியம் அவ்வளவு எளிதில் முடியும் என அவரே எதிர்பார்க்கவில்லை. இயக்குநரின் வார்த்தைகள் போதையையும் தாண்டி சம்பந்தத்தை மிதக்க வைத்தன. அதுவும் அடுத்த நாளே அவருக்கு ஷூட்டிங்.

-------Cut---------

SC NO 19
EXT / DAY/ Paddy Field

அறுப்புக்கு தயாராக இருக்கும் நெல் வயல். அதன் அருகே இருக்கும் மண் ரோட்டில் கதாநாயகன் ஹீரோயினுக்கு டிராக்டர் கற்றுத் தருவது. அவள் தப்புத்தப்பாய் ஓட்டி, நெல் வயலுக்குள் டிராக்டர் சென்றுவிடுவது. இருவரும் ரொமான்ஸுடன் டிராக்டர் ஓட்டிக்கொண்டிருக்க, பாடல் ஃப்ரீஸ் ஆவது. தூரத்தில் ஒரு பெரியவர் முண்டாசு, மம்பட்டியுடன் வரப்பில் சத்தம் போட்டுக்கொண்டே ஓடிவருவது. அவரைப் பார்த்ததும் இருவரும் இறங்கி ஓடிச் செல்வது.
--------Cut-----------

ஹீரோயினுக்கு டிராக்டரில் உட்கார்ந்ததும் நடிக்கவே வரவில்லை. ஆறாவது டேக் போகிறது. இயக்குநர் பயங்கர கடுப்பில் இருந்தார். ‘’ஏம்மா.. உன்னை என்ன ப்ளைட்டா ஓட்டச் சொல்றேன். இந்தா... இவர் எல்லாம் இங்க நாடகத்துல நடிக்கிறவர். ஆனா ஒரு புரஃபஷனல் ஆக்டர் மாதிரி என்னமா நடிக்கிராரு.. நீ எல்லாம் ஹீரோயின்னுட்டு வந்து ஏன் இப்படி உயிரை எடுக்குற?”

சம்பந்தத்துக்கு உடல் சிலிர்த்தது. தன்னைத்தானே மெச்சிக்கொண்ட அவர் ஏழாவது டேக்கிலும் உற்சாகத்துடன் வரப்பில் ஓடிவந்தார். அவரை அருகில் கண்டதும் டிராக்டரில் இருந்து இருவரும் இறங்கி ஓட, “ஊராமுட்டு அறுப்பு வயல்ல வந்து காதல் கேக்குதோ காதலு.. அய்யா வரட்டும். உங்களுக்கு இருக்கு கச்சேரி” என்ற தனக்கு வழங்கப்பட்ட டயலாக்கை சிவாஜி கணேசன் மாதிரி முகத் தசைகள் அதிர உணர்ச்சிப் பூர்வமாக உச்சரித்தார். படத்தில் ‘ஊராமூட்டுதும்’ நிஜத்தில் அவருடையதுமான அறுப்பு வயலில் நெற்கதிர்கள் டிராக்டர் சக்கரத்தில் சிக்கி சுழன்றன. டேக் ஓ.கே. ஆனதும் சம்பந்தத்தை அழைத்து அந்தக் காட்சியை மானிட்டரில் காட்டினார் இயக்குநர். சம்பந்தத்துக்கு எல்லாம் ஒரு கனவு போலவே இருந்தது.

‘‘ஆர்.ஆர். போட்டு தியேட்டர்ல பார்த்தீங்கன்னா இன்னும் பிரமாதமா வரும்ங்க”

அவர் எந்த ஆர்.ஆரைக் கண்டார்? அவருக்கு தெரிந்தது எல்லாம் டி.ஆர். என்று ஒரு நடிகர் இருக்கிறார், அவருக்கு நிறைய தாடி இருக்கிறது என்பது மட்டுமே. ஷாட் முடிந்து வந்த கதாநாயகியிடம் ‘‘சார்தான் இந்த ஊருக்கு எல்லாமே.. இதுலேர்ந்து அந்தக் கடைசி வரைக்கும் எல்லா நெலமும் சாரோடதுதான்” என்று ஒரு அஸிட்டெண்ட் டைரக்டர் பிட்டைப் போட்டான். அவன் கண்களுக்கு சம்பந்தம் ஒரு புரடியூசராய் தெரிந்திருக்கக்கூடும்.

சுற்றி சுற்றி ஷூட்டிங். பஞ்சாயத்தில் கும்பலாக நிற்பது, பாட்டு சீனில் நடந்துகொண்டே இருப்பது, அட்மாஸ்பியரில் வந்துபோவது... என கீழக்கோட்டையைச் சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து ‘திட்டத்தில்’ எழுபது, எழுபத்தைந்து பேராவது நடித்திருப்பார்கள். திடீரென்று ஒருநாள் சம்பந்தத்தைத் தேடிவந்த இயக்குநர், ‘‘உங்களுக்கு இன்னும் நாலு சீன் வெச்சிருக்கேன். ஆனா ஏழெட்டு கிலோ எடையைக் குறைக்கனும். அடுத்த மாசம்தான் ஷூட்டிங். அதுக்குள்ள குறைச்சிடுங்க’’ என்று சொல்லிவிட்டுப் போய்விட்டார். ஒரு மாதத்தில் எட்டு கிலோ எடை குறைத்தாக வேண்டும். 51 வயதில் இப்படி ஒரு லட்சியம் வரும் என அவர் எதிர்பார்க்கவே இல்லை. கலைத்தாகம் என்று வந்துவிட்டப் பிறகு இதையெல்லாம் பார்த்தால் முடியுமா? ‘உளி தாங்கும் கற்கள்தான் சிலையாகும்’ என சம்பந்தம், ராணிமுத்து காலண்டரில் படித்திருக்கிறார்.

-------Cut-------

SC NO 42
EXT / Day / Pond

குளத்தில் பிடித்த மீன்களுடன் சுப்பையா கரைக்கு வருவது. மீனுக்கு காத்திருப்பவர்களுக்கு எடைபோட்டு விற்பது. மீன் வாங்க வரும் ஹீரோயின் பை இல்லாததால் தன் பாவாடையில் மீனை வாங்கிச் செல்வது. அப்போது ஒரு போலீஸ்காரர் வந்து மீன் வாங்குவது. மீனை வாங்கிக்கொள்ளும் போலிஸ்காரர் வண்டியை ஸ்டார்ட் செய்தபடி இந்தப் பக்கம் திரும்பி இன்னொருவரிடம், ‘உங்க ஊரானுவளுக்கு மண்டையில அறிவே கிடையாதா? இவனுவொ சும்மா இருக்கும்போதே துளுத்துப்போயி அலையுறானுவ... இதுல குளத்துல இறக்கிவிட்டு மீன் பிடிக்கிற வரைக்கும் கொண்டாந்து விட்டுருக்கிய’ என்பது. பின்புறம் சுப்பையா மீன் விற்றுக்கொண்டிருப்பது போகஸ் அவுட்டில் தெரிவது.

-------Cut-------

அந்த மீன் குளம் கூட சம்பந்தம் ஏலம் எடுத்ததுதான். ரெண்டு வருடமாக போராடி குளம் ஏலத்தை எடுத்தார். சம்பந்தத்துக்கு நினைக்க, நினைக்க கடுப்புதான் மிஞ்சியது. ஒரு படத்தில் நடிப்பது... அப்படியே பிக்-அப் ஆகி பின்னி எடுப்பது என அவர் மனதில் பல திட்டங்கள் இருந்தன. ஆனால் இப்போது அவருக்குத் தமிழில் பிடிக்காத ஒரே வார்த்தை ‘திட்டம்’!

‘‘இப்ப என்ன குடியா முழுகிப்பொயித்து... வயசுக்கு வந்தப் புள்ளயாட்டம் வெளியத்தெருவப் போவாம அடுப்படியையே சுத்தி சுத்தி வர்றிய?”

வாசலில் இருந்த பைப் கட்டையில் தண்ணீர் பிடித்தபடி பேசினாள் சம்பந்தத்தின் மனைவி.

“மழவராயன் தெருவுக்கு சரியா கேக்கலயாம். அந்தப் பக்கமா நால்ரோட்டுலப் போய் நின்னு அடித்தொண்டையிலேர்ந்து கத்து... போ”

அந்தம்மா முறைத்துக்கொண்டே தண்ணீர் குடத்துடன் வீட்டுக்குள் போனது. அவரது வாயில் இருந்து விடுபட்ட சுருட்டுப் புகை தெருவில் கசிந்துகொண்டிருந்தது. படம் ரிலீஸ் ஆனதும் இந்த பக்கத்து ஊர்க்காரர்கர்கள் எல்லோரும் திருவிழா மாதிரி தியேட்டருக்கு ஓடினார்கள். காட்சிக்குக் காட்சி கை தட்டல்கள். சம்பந்தத்துக்கு மட்டும் பார்க்க பார்க்க பற்றிக்கொண்டு வந்தது.

“என்னா மாமா... இன்னமுமா அதையே உருப்போட்டுக்கிட்டு அலையுறீய? இதெல்லாம் ஒரு கவலைன்னு... விடு மாமா” சமத்தலிங்கம் பேச்சோடு உள்ளே வந்தான்.

“நீ ஏன் பேசமாட்ட? பபூனைப் புடிச்சு கீழக்கோட்டையான் போலீஸ்காரனா காட்டிட்டான்ல.. நீ அப்படித்தான் பேசுவ’’

“இப்ப உங்களை மட்டும் என்னாத்த குறைச்சலா காட்டிப்புட்டாங்குறீய... படத்தோட பேரையே உன் மூஞ்சிலதான மாமா போடுறான். இப்ப கூட டி.வி.ல பார்த்துட்டுதான் வர்றேன்”

“எல... இந்த நக்கல் மயிறு எல்லாம் என்கிட்ட வேண்டாம். அந்த கீழக்கோட்டையான் என்னைய பறப்பயலா காட்டியிருக்கான். அதை அப்படியே விட்டுட்டுப் போவச் சொல்றியா?”

“நீதான மாமா அவனை தேடிப்போய் அழைச்சுட்டு வந்த...”

“அதை நினைச்சாதாண்டா மனசு ஆறலை... சுத்தி நாலு பக்கமும் லைட்டை வெச்சு, மேலால மைக்கை நீட்டி அவன் சொன்ன வசனத்தைதான்டா சொன்னேன். அதுல இவ்வளவு வெனயம் இருக்கும்னு தெரியலையே.. கடைசில கீழக்கோட்டையான் புத்தியைக் காட்டிட்டான் பாரு... அவனுவொளை உள்ள விட்டா எதாச்சும் குந்தகேடு பண்ணாம போவமாட்டானுவன்னு தலையால அடிச்சுக்கிட்டா என் பொண்டாட்டி. இப்ப என் சாதியை மாத்தி உலகம் பூரா தண்ட்ரா அடிச்சுட்டான் அந்த கம்னாட்டி. இனிமே நான் தண்ட்ரா அடிக்க வேண்டியதான் பாக்கி. அடுத்த வாரம் பருவம் வேற வருது”

சம்பந்தத்தின் கவலை எல்லாம் எங்கு சுற்றியும் சித்திரா பருவத்திலேயே வந்து நின்றது. வீட்டுக்கு வந்து டி.வி.யை போட்டால் ஹீரோயின் சகிதமாக திருச்சி லோக்கல் சேனலில் பேட்டிக் கொடுத்துக்கொண்டிருந்தான் இயக்குநர். கடுப்பாக டி.வி.யை நிறுத்தினார் சம்பந்தம்.
*****
பருவத்தின் இரவு. எங்கும் வெளிச்ச தோரணங்கள். வெளியில் ரேடியோ செட்டுகள் முழங்க, நாடக மேடையின் முன்பக்கம் கூட்டம் கெக்கலித்தது. புதுக்கோட்டை செட்டின் வள்ளியும், தெய்வானையும் மேக்-அப் போட்டு தயாராக இருந்தனர். சம்பந்தம் மட்டும் மூஞ்சியை தூக்கி வைத்துக்கொண்டு அமர்ந்திருந்தார். ‘‘முருகன் மூஞ்சி எப்பவும் சிரிச்ச மொகமா இருக்கனும்” என்றார் மேக்-அப் போடுபவர்.

‘’நான் நடிக்கலை”

எல்லாம் தயாராக இருந்த நிலையில் சம்பந்தத்தின் அதிரடி குண்டுவீச்சு அரங்கத்தை நிலைகுலைய வைத்தது. பபூன் வேஷத்தில் அமர்ந்திருந்த சமத்தலிங்கம் வில்லன் குரலில் பேசினான்.

“யோவ் மாமா... முதல்ல வேஷத்தைப் போடுய்யா.. எதையா இருந்தாலும் காலையில பேசிக்குவோம்”

“இல்லடா... தீட்டோட முருகனா நடிக்ககூடாதுறா.. என் தீட்டு சாமிக்கும் தொத்திக்கும்”

வெளியில் சரசரவென இரண்டு, மூன்று கார்கள் வந்து நின்றன. மேடையின் பின் பக்கம் இருந்த கீற்றுத் தட்டியை தள்ளிக்கொண்டு உள்ளே வந்தார் இயக்குநர் திருமூர்த்தி. அவர் பின்னாலேயே ‘திட்டம்’ ஹீரோயினும், ஹீரோவும் வர... சம்பந்தம் கண்களுக்கு இயக்குநரின் உருவம் மட்டுமே தெரிந்தது. கோபம் தலைக்கேற ஓடிச்சென்று இயக்குநரின் சட்டையைப் பிடித்து உலுக்க, அவன் தலையில் மாட்டியிருந்த கூலிங்கிளாஸ் கீழே விழுந்து நொறுங்கியது. சமத்தலிங்கம் விலக்க முற்பட்டான். “அங்கிள், விடுங்க அங்கிள்” என ஹீரோயினும் சம்பந்தத்தைப் பிடித்து இழுத்தாள். யுத்த காண்டத்தின் இறுதிக் காட்சியில் நெடிய மௌனத்தைத் தொடர்ந்து...

“அது வெறும் சினிமாங்க.. இந்தா இங்க பபூனா நடிக்கிறாரே... இவர் கூடதான் போலீஸ்காரரா நடிச்சாரு... அதுக்காக நிஜத்துல போலீஸுன்னு அர்த்தமா?”

‘‘அதுக்காவ... என் சாதியை மாத்திருவியா... அதுவும் இதுவும் ஒண்ணா?”

‘‘இங்கப்பாருங்க.. நிஜமாவே எனக்கு உங்களை அவமானப்படுத்தனும்னு எந்த நோக்கமும் இல்லை. இன்ஃபாக்ட், என் ஷூட்டிங் நல்லபடியா முடியுறதுக்கு நீங்க எவ்வளவோ ஹெல்ப் பண்ணீங்க. நீங்கல்லாம் இல்லாட்டி என்னால படமே எடுத்திருக்க முடியாது. அப்பதான் எதுவும் உங்களுக்கு பண்ண முடியலை..” என்று எழுந்த இயக்குநர் சம்பந்தத்தின் சட்டைப் பையில் பணக்கட்டு ஒன்றை திணித்தான். பணத்தின் அளவு கூடுதலாய் இருப்பது தெரிந்ததும் கொஞ்சம் வேகமாக மறுத்து வேண்டா வெறுப்பாக வாங்குவது போல பணத்தை நுனிக்கையால் வாங்கிக்கொண்டார். இந்த தள்ளுமுள்ளிலும் அவர் சுருட்டு அணையாமல் புகைந்துகொண்டிருந்தது.

“பணம் இன்னைக்கு வரும், நாளைக்குப் போவும். நாளைக்கே உனக்கு ரெண்டு லட்ச ரூவா நான் தாறேன். நீ உன் சாதியை மாத்திக்குவியா? சரி அதைவிடு... இந்த தீட்டோட நான் எப்படி முருகனா நடிக்கிறது? முதல்ல அதுக்குப் பதில் சொல்லு” இதற்கு என்னவென்று பதில் சொல்வது என இயக்குநருக்கு புரியவில்லை.

‘‘நாடகத்துக்கு ஒரு வாரத்துக்கு முந்திலேர்ந்து கறி, மீனு திங்காம... இந்தா இந்த சுருட்டைக் கூட குடிக்காம சுத்தபத்தமா இருக்குற ஆளு நானு. நீ என் சாதியவே மாத்திப்புட்ட.. இப்ப எப்படி நான் முருகனா நடிக்கிறது?”

சமத்தலிங்கம் கண் சம்பந்தத்தின் கையில் இருந்த பணத்தின் மீதே இருந்தது. போலீஸ்காரனாக நடித்ததில் தனக்கேற்பட்ட கௌரவக் குறைச்சல்கள் எதையாவது அவசரமாக ஞாபகப்படுத்த முயன்றான். இதற்குள் கூட்டம் கூடியிருந்தது. பிரச்னை என்னவாக இருக்கக்கூடும் என்ற யூகப்பேச்சுகள் கிளம்பியிருந்தன.

“ஏம்பா... நடந்தது நடந்துப்போச்சு. அந்தா ஹீரோயினுதான் நல்லா நடிக்கிதே... அதை இன்னைக்கு ஒரு நாளு நம்ம நாடகத்துல வள்ளியா நடிச்சுட்டுப் போவச் சொல்லுங்கப்பா” என்றது கூட்டத்தின் குரல் ஒன்று. ஹீரோயினுக்கு அன்றைய ராசிபலன், ‘தலைக்கு வந்தது தலைப்பாகையோடு’ என்பதாய் இருந்திருக்க வேண்டும். அந்தக் குரல், கூட்டத்தின் கூச்சலில் அமுங்கிப்போனது.

“சொல்லு தம்பி... நான் எப்படி முருகனா நடிக்கிறது, இந்த தீட்டை எப்படிப் போக்குறது?” இயக்குநர் பொறுமை இழந்தான்.

“ஏங்க... அந்த முருகன் என்ன சாதின்னு உங்களுக்குத் தெரியுமா? அவரே சாதிவிட்டு சாதி கல்யாணம் பண்ணவருதாங்க. முருகனோட மொத வொய்ஃப் ஒரு சாதி. ரெண்டாவது வொய்ஃப் வேற சாதி. என்னமோ தீட்டு, தீட்டுங்குறீங்க?”

அவர்கள் கிளம்பிப்போய்விட்டார்கள். சம்பந்தத்துக்கு தலை சுற்றத் தொடங்கியது. ’முருகன் என்ன சாதி?’

---------The End-------

-பாரதி தம்பி

கருத்துகள்

அரபுத்தமிழன் இவ்வாறு கூறியுள்ளார்…
கதை மிக மிக அருமை
அடிக்கடி எழுதுங்களேன்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
Excellent story. Enjoyed much!
PRABHU RAJADURAI இவ்வாறு கூறியுள்ளார்…
enjoyed the subtle comedy...

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்