அகதிகள் முகாம்..பண்பாட்டு மாற்றங்கள்

உயர்ந்து பறக்கிறது விஜயகாந்த் கட்சிக் கொடி. ''ஏ...போட்டோ புடிக்காங்க..” என்று நெல்லைத் தமிழில் வார்த்தைகளை சிதறவிட்டோடுகின்றனர் சிறுவர்கள்.கலாச்சார,பண்பாட்டு மாற்றங்களை கட்டாயமாக ஏற்றுக்கொள்ள விதிக்கப்பட்டிருக்கும் ஒரு இனத்தின் சாட்சியாக விரிகிறது தாழையூத்து அகதிகள் முகாம்.




திருநெல்வேலியிலிருந்து மதுரை செல்லும் சாலையில் சங்கர் சிமெண்ட் தொழிற்சாலைக்கு பின்புறமாக இருக்கிறது இந்த முகாம்.சிமெண்ட் நுண்துகள்கள் விரவிக்கிடக்கிற முகாமில் யாவரின் முகத்திலும் வறட்சியான சிர்ப்பையே காண முடிகிறது. அண்மையில் அயலகத்திலிருந்து வந்திருந்த திரு, தூத்துக்குடியிலிருந்து வந்திருந்த வரவணையானோடு நானும் இணைந்து தாழையூத்து அகதிகள் முகாமிற்குப் போயிருந்தோம்.

கிட்டத்தட்ட 16 வருடங்களுக்கு முன்பு அமைக்கப்பட்ட முகாம் இது.தன் மண்ணையும்,மக்களையும் ஈழத்தின் ஈர மண்ணை விட்டுவிட்டு, உயிர் பிழைக்க புலம் பெயர்ந்து வந்தவர்கள் இவர்கள்.கணவன் இங்கு...மனைவி அங்கு...பிள்ளை இங்கு...தாய் அங்கு..என்று காலம் இவர்களை கூறு போட்டுவிட்டது.கேட்டபொழுதில் கதைப்பதற்கும்,பகிர்வதற்கும் மனதெங்கும் ஆயிரமாயிரம் கதைகளை தேக்கிவைத்திருக்கின்றனர்.

நூற்றுக்கணக்கானவர்கள் வசிக்கும் இந்த முகாமிற்கு அரசு அமைத்து தந்திருக்கும் அடிப்படை வசதிகள் எவையும் போதுமானவையாக இல்லை.இந்த குறைகள் பற்றிய விடயங்களை தன் பார்வையில் சிறப்பாகவே பதிவு செய்திருக்கிறார் திரு.என் பார்வையில் இந்த 16 ஆண்டுகளில் இவர்களுக்குள் ஏற்பட்டிருக்கும் அல்லது ஏற்படுத்தப்பட்டிருக்கும் கலாச்சார பண்பாட்டு மாற்றங்களை இங்கு பதிவிட விரும்புகிறேன்.அது அவசியமானது என்றும் கருதுகிறேன்.

மொழி:
முகாமில் வசிக்கும் பெரியவர்களின் மொழியில் கூட குறிப்பிடத்தகுந்த மாற்றம் தெரிகிறது.உரையாடலில் முழுக்கவே ஈழத்தமிழ் வருவதில்லை.பாதிக்குப்பாதி தமிழக தமிழையே கதைக்கின்றனர்.எங்களுடன் உரையாடுவதற்காக மெனக்கெட்டு அவ்வாறு பேசுகிறார்களோ என்ற சந்தேகம் எனக்கு ஏற்பட்டது.அதைக் கேட்டபோது, தங்களின் பேச்சுமொழியில் மாற்றம் ஏற்பட்டிருப்பதை ஏற்றுக்கொள்கின்றனர்.சிறுவர்கள், சிறுவயது முதலே இங்குள்ள பள்ளியில்தான் படிக்கின்றனர் என்பதால், நெல்லைத் தமிழை பிரதானமாய் பேசுகின்றனர்.வீட்டிற்கு வரும்போது மட்டும் ஈழத்தமிழ் வார்த்தைகளோடு கலந்த தமிழுக்கு தாவிவிடுகின்றனர்.ஒரே மொழியின் இரட்டைத் தன்மையை ஒரே நேரத்தில் உள் வாங்குவது சிறுவர்களுக்குள் என்ன விதமான மாற்றத்தை ஏற்படுத்தும் என்பது ஆய்வுக்குரியது.நாளை தங்களின் சொந்த மண்ணுக்குப் போக வேண்டிய நிலை வந்தால் இந்த சிறுவர்கள், ஈழத்தில் எதிர்கொள்ள வேண்டிய பேச்சுமொழி சிக்கல்கள் கவனிக்க வேண்டியவை.

உணவு:
முகாமில் இருக்கும் பெரும்பான்மையோர் மீனவர்கள்.இலங்கையில் மீன் என்பது இவர்களின் அன்றாட உணவு.அதை கொணர்வதற்கும்,சமைப்பதற்கும்,உண்பதற்குமான எந்த சிரமமும் ஈழத்தில் இருந்திருக்க வாய்ப்பில்லை.ஆனால் இங்கு நிலைமை வேறு.மீன் என்பது சராசரி உணவல்ல.அதிக விலைகொடுத்து, (சராசரியாக ஒரு கிலோ 50 முதல், 100 ரூபாய்) வாங்கி உண்ண வேண்டிய பொருள்.முகாமில் கொடுக்கும் மாதாந்திர உதவி தொகையையும்,கூலி வேலைக்குப் போனால் கிடைக்கும் சொற்ப வருமானத்தையும் வைத்துக்கொண்டு எப்படி மீன் வாங்குவது..?இதனால் தங்களின் உணவு பழக்கத்தையே மாற்றிக்கொள்ள வேண்டிய நிலைமை.இங்கு மட்டுமல்ல..அகதிகள் முகாமில் அடைப்பட்டு கிடக்கும் அனைத்து மீனவ அகதிகளின் நிலையும் இதுதான்.அப்படியே ஒரு சிலர் என்றைக்காவது மீன் வாங்கினாலும், தீப்பெட்டிகளை அடுக்கி வைத்ததுபோன்ற முகாமின் நெருக்கடியில் சங்கடமின்றி சாப்பிட முடியாது என்பதே யதார்த்தம்.




திருமணம்:
ஒரு முகாமிலிருந்து மற்றொரு முகாமிற்கு பெண்களை திருமணம் செய்து கொடுக்கின்றனர்.அப்படி நடக்கும் திருமணங்களுக்கு அழைப்பிதழ் அச்சடிப்பதும், மண்டபத்தில் திருமணத்தை நடத்தி மகிழ்வதும் இவர்களின் பொருளாதார நிலைக்கு சாத்தியமில்லை.இதனால் அவரவர் வீட்டு வாசலில் அல்லது முகாமில் கொஞ்சம் இடமிருக்கும் பகுதியில் திருமணத்தை நடத்தி முடித்து விடுகின்றனர்.திருமணத்திற்குப் பிறகான இவர்களின் வாழ்நிலையும் கொடுமையானதே.இட நெருக்கடியில் புது மண தம்பதிகள் தவிப்பதை நாகரீகம் கருதி பலர் நாசூக்காக சொன்னாலும், அதன் சங்கடம் புரிகிறபோது மனசு வலிக்கிறது.

மரணம் என்கிற நிலை வரும்போதுதான் இவர்கள் மன ரீதியான பாதிப்புக்கும்,சங்கடத்திற்கும் ஆளாகின்றனர்.இங்கு தந்தை இறந்த விடயத்தை ஈழத்தில் இருக்கும் மகனுக்கு ஒரு தகவலாக சொல்வதற்குக் கூட இயலாத சூழ்நிலைகளும் ஏற்படுகின்றன.உள்ளூர் சுடுகாட்டின் ஒரு ஓரப்பகுதியையே தங்களுக்கானதாகவும் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

முகாமின் இளைஞர்கள் பலரும், விஜயகாந்த்தின் ரசிகர்களாக இருக்கின்றனர்."எங்களுக்கு ஓட்டுரிமை வழங்கப்பட்டால் கேப்டனுக்கே வாக்களிப்போம்" என்கிறார்கள்.பிரபாகரன்பற்றி பேச்சு வந்தால் மௌனமே பதிலாக வருகிறது. "இங்கட பிழைக்க வந்திருக்கம்.தேவையில்லாம பேசி சிக்கல்கள் வந்துடக் கூடாதுதானே.." என்கிறார்கள்.

பேசிக்கொண்டே கிளம்பியபோது ஒரு இளைஞர் எங்களுடனேயே வந்தார். "ஈழத்தமிழர்கள் உலகம் முழுக்க இருக்காங்கள்.லண்டன்,ஜெர்மனி,ஆஸ்திரேலியா எண்டு பல நாடுகளில் நல்லா சம்பாதிக்கிறாங்கள்.அகதியா போனாலும் அங்கட போனாதான் நல்ல பொழப்பு பொழைக்க முடியும்.ஆனால் அதுக்கும் கன ரூபாய் வேணும்.எங்களின்றைதான் அது இல்லையே...என்ன செய்ய ஏலும்..?" என்று அந்த இளைஞர் சொன்ன வார்த்தைகள் இன்னும் மனதை பிசைந்துகொண்டேயிருக்கின்றன.

இந்த கட்டுரை பூங்கா (5.2.2007) இதழில் தொகுக்கப்பட்டுள்ளது.

கருத்துகள்

- யெஸ்.பாலபாரதி இவ்வாறு கூறியுள்ளார்…
உண்மை ஆழியூரான்! இந்த விடயங்களை வெளிக்கொணறா வேண்டும் என்பதற்காத்தான் நம் நாட்டில் இருக்கும் அகதி முகாம் களைப்பற்றி பார்வையிட்டு எழுத வேண்டும் என்று சொன்னோம். ஆனால்.. எனக்கான வாய்ப்பு இன்னும் அமைய வில்லை. அல்லது எழுதும் மனதில் வலு வரவில்லை என்று கூட சொல்லலாம்!

:(
RBGR இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல முறையில் தொகுத்துள்ளீர்.

இது நம்மால் கவனிக்கக் கூடிய , நம்மால் நமது அரசாங்கத்திற்கு சுட்டிக்காட்டி விடக்கூடிய ஒரு விடயம் தான். இதனைப் பற்றி எழுதுவதற்கு ஆட்கள் இல்லையே! என்று தேடிக்கொண்டிராமல் எழுதிய 'திரு'விற்கும் உங்களுக்கும் நன்றி.

இன்னும் நிறைய பேர் முன் வரவேண்டும். திரு அவர்கள் கலந்து கொண்ட கடந்த சென்னை வலைப்பதிவர் சந்திப்பில் நான் வலியுறுத்தியதும் அதுவே.!
நம்மால் இயன்ற உதவி..நாடி வந்தோரை தாங்கிப் பிடிப்பது தான்..!

பிறகு பார்த்துக்கொள்ளலாம், ஒரு கால் நூற்றாண்டாகியும் கிடைக்காத தமிழர் விடுதலையயும் அதை வைத்து நமது( மற்றும் உலக) அரசியல்வாதிகளினையும்.
பொன்ஸ்~~Poorna இவ்வாறு கூறியுள்ளார்…
நல்ல பதிவு ஆழியூரான். இன்னும் விரிவாக எழுதி இருக்கலாமோ?
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
இது ஒரூ நல்ல முயற்சி
அடிக்கடி இதுபோன்ற நேரடி அனுபவ பதிவுகளை எழுதுங்கள்;
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
///உண்மை ஆழியூரான்! இந்த விடயங்களை வெளிக்கொணறா வேண்டும் என்பதற்காத்தான் நம் நாட்டில் இருக்கும் அகதி முகாம் களைப்பற்றி பார்வையிட்டு எழுத வேண்டும் என்று சொன்னோம். ஆனால்.. எனக்கான வாய்ப்பு இன்னும் அமைய வில்லை. அல்லது எழுதும் மனதில் வலு வரவில்லை என்று கூட சொல்லலாம்!///

உண்மைதான்.எங்கள் அனுபவமும் எங்களை மனது கனக்க செய்வதாகவே அமைந்தது.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
தமிழி...வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//நல்ல பதிவு ஆழியூரான். இன்னும் விரிவாக எழுதி இருக்கலாமோ?//

நீங்கள் சொல்வது சரிதான் பொன்ஸ்.விரிவாக எழுதியிருக்க வேண்டும்.விடுபட்டவைகளை மறுபடியும் ஒரு பதிவாக எழுத முயற்சிக்கிறேன்.
பாரதி தம்பி இவ்வாறு கூறியுள்ளார்…
//இது ஒரூ நல்ல முயற்சி
அடிக்கடி இதுபோன்ற நேரடி அனுபவ பதிவுகளை எழுதுங்கள்;//

நன்றி தமிழன்.
வெற்றி இவ்வாறு கூறியுள்ளார்…
ஆழியூரான்,
மனதைத் தொட்ட பதிவு.

/* ஈழத்தமிழர்கள் உலகம் முழுக்க இருக்காங்கள்.லண்டன்,ஜெர்மனி,ஆஸ்திரேலியா எண்டு பல நாடுகளில் நல்லா சம்பாதிக்கிறாங்கள்.அகதியா போனாலும் அங்கட போனாதான் நல்ல பொழப்பு பொழைக்க முடியும்.ஆனால் அதுக்கும் கன ரூபாய் வேணும்.எங்களின்றைதான் அது இல்லையே...என்ன செய்ய ஏலும்..?"*/

உண்மையான வார்த்தைகள். வசதி படைத்தவர்கள், அல்லது பல சொத்துக்கள் [நிலம் ,புலம்] வைத்திருந்தவர்கள் அவற்றை விற்றோ சுட்டோ மேற்குலக நாடுகளுக்குச் சென்றனர். ஆனால் அன்றாடம் கூலி வேலை செய்தோ அல்லது மீன் பிடித் தொழில் செய்தோ வாழ்ந்து வந்த இம் மக்களின் பொருளாதார வசதி மோசமக இருந்ததாலும், சேமிப்புகள் இல்லாததாலும் சும்மா உடுத்த உடுப்புக்களுடன் உயிரைக் காப்பாற்ற வந்தவர்கள் தான் இவர்கள். தமிழகத்திற்கு வந்த வசதி படைத்த ஈழத்தவர்கள் தமிழகத்தில் வீடுகள் வாங்கி வசதியாக உள்ளதாகவும் அறிந்தேன். ஆக, பொருளதாரத்தில் பிற்பட்டிருந்ததால் இன்றும் அதன் கொடுமைகளை அனுபவித்துக் கொண்டிருப்பது மிகவும் வேதனையக உள்ளது.
thiru இவ்வாறு கூறியுள்ளார்…
//அகதியா போனாலும் அங்கட போனாதான் நல்ல பொழப்பு பொழைக்க முடியும்.ஆனால் அதுக்கும் கன ரூபாய் வேணும்.எங்களின்றைதான் அது இல்லையே...என்ன செய்ய ஏலும்..?" என்று அந்த இளைஞர் சொன்ன வார்த்தைகள் இன்னும் மனதை பிசைந்துகொண்டேயிருக்கின்றன.//

மனது கனக்கிறது. :((

நாம் கண்டவற்றை மிகைப்படுத்தாமல் எழுதியிருக்கிறீர்கள். ஆழியூரான் இன்று தான் இந்த கட்டுரை வாசிக்க கிடைத்தது. வாழ்த்துக்கள்.
பெயரில்லா இவ்வாறு கூறியுள்ளார்…
அருமையான கட்டுரை. சே குவாரவின் படங்கள் கிடைத்கரியவை. உங்களின் நடைவண்டி மிக சிறப்பாக அமைந்துள்ளது. இலங்கைத் தீவின் செய்திகளை விபரமாக உடனுக்குடன் அறிந்து கொள்ள விரும்பின் எனது தளச் சுட்டியைச் சொடுக்கவும்
மதி கந்தசாமி (Mathy Kandasamy) இவ்வாறு கூறியுள்ளார்…
Azhiyuran,
I translated few sections of this post for Global Voices Online on account of World Refugees Day.

It could be read here:

http://www.globalvoicesonline.org/2007/06/22/tamil-blogosphere-sri-lankan-tamil-refugees-in-india

French translation here:

Blogosphère tamoul: Les réfugiés tamouls sri-lankais en Inde

-Mathy

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

கற்றதனால் ஆன பயனென்ன..?

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

ஒரு சாகசக்காரனின் நாட்குறிப்புகள்