இடுகைகள்

2007 இலிருந்து இடுகைகளைக் காட்டுகிறது

நினைவின் நிழல்..!

படம்
மீ னாட்சி மெஸ்ஸுக்கு எப்போது போனாலும் வலது கை தூக்கி சல்யூட் அடிக்கும், ஒல்லியான தேகம் கொண்ட அவரை இரண்டு வருடங்களாகப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். எப்போதும் சிவப்புகலர் வலை பனியந்தான் அணிவார். பனியனின் மேல்புறம் இரண்டு ஓட்டைகள் நிரந்தரமாக இருக்கும். ''இது ஒரு பனியன்தான் இருக்கா..?'' என்று ஒருமுறை கேட்டதற்கு கை விரல்களை மடக்கிக்காட்டி 'நான்கு' என்றார். நான்கிலுமே ஓட்டை இருப்பது ஆச்சர்யமானதுதான். ஒருவேளை பனியன் வாங்கிய உடனேயே இவரே ஓட்டை போட்டுவிடுவாரோ என்று கூட தோன்றும். சாப்பிட்ட இலைகளை ஒரு டிரேயில் எடுப்பதும், மேசையை துடைப்பதும் அவர் வேலை. வாழை இலையின் அடியில் இருக்கும் நார்போன்ற தண்டுப்பகுதியை கைக்கு அடக்கமாக நான்கைந்து வெட்டி வைத்திருப்பார். மேசையில் கொஞ்சமாக தண்ணீர் தெளித்து தண்டுப்பகுதியைக்கொண்டு நேர்த்தியாக துடைப்பார். அவர் கவனம் முழுவதும் அமர்ந்திருப்பவர்களின் உடலில் ஒரு துளி கூட சிந்திவிடக்கூடாது என்பதிலேயே இருக்கும். இடையிடையே சாப்பிட அமர்ந்திருக்கும் நம்மிடம், ''சிவசக்தி தியேட்டர்ல.. மாயாக்கா.. " என்று சொல்லிவிட்டு, 'சூப்பர்' என்பதா

சாதி சூழ் உலகு- Part II

இ ந்தியா, இலங்கை, பாகிஸ்தான், அமெரிக்கா... இதெல்லாம் நாடுகள் என்று தெரியும். கப்பலூர், உஞ்சனை, கோனூர்.. போன்ற பெயர்களிலும் 'நாடுகள்' இருக்கின்றன என்று சொன்னால் நீங்கள் நம்ப மறுக்கக்கூடும். ஆனால் உண்மை. தமிழகத்தின் பல பகுதிகள் நாடுகளாக பிரிவுற்றிருக்கின்றன. இது நண்பர்கள் பலருக்குப் பழைய செய்தியாகக்கூட இருக்கலாம். தெரியாதவர்கள் தெரிந்துகொள்ளவும், ஒரு ஆவணப்படுத்தும் முயற்சியாகவுமே இந்தக் கட்டுரை. த ஞ்சை மாவட்டத்தின் தெற்குப் பகுதியான ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, திருவோணம், வடுவூர் பகுதியில் அமைந்திருக்கிற கிராமங்கள் அனைத்தும் 'நாடு' என்ற கட்டமைப்புக்குள் உள்ளடங்கி வருகின்றன. பதினெட்டு அல்லது அதை ஒட்டிய எண்ணிக்கையில் அமைந்த கிராமங்கள், ஒரு நாடாக கருதப்படுகிறது. உதாரணமாக காசவளநாடு என்ற நாட்டிற்குள், பஞ்சநதிகோட்டை, தெக்கூர், புதூர், கோவிலூர், நெல்லுபட்டு, ஆழிவாய்க்கால், காட்டுக்குறிச்சி, கொல்லாங்கரை, வேங்குராயன்குடிகாடு, ஈச்சங்கோட்டை, கருக்காக்கோட்டை, நடுவூர், விளார், கண்டிதம்பட்டு, சாமிப்பட்டி... இப்படி நிறைய கிராமங்கள் உண்டு. இக்கிராமங்களைச் சேர்ந்தவர்கள், தாங்கள் இன்ன நாட்டு

சாதி சூழ் உலகு..!

தி ருநெல்வேலியிலிருந்து பதினைந்து கிலோமீட்டர் தொலைவில் சிவந்திபட்டி என்னும் கிராமம் உண்டு. மொத்தம் ஆறு பேருந்துகள், ஒரு நாளைக்கு 25 தடவை திருநெல்வேலியிலிருந்து சிவந்திபட்டிக்கு வந்துபோயின. அந்த அளவுக்கு ஆள் நடமாட்டம் உள்ள கிராமம். அப்படிப்பட்ட ஊருக்குள் கடந்த பத்து வருடங்களாக எந்த பேருந்தும் செல்லவில்லை. அரசு உத்தரவின் பேரில் அனைத்துப் பேருந்துகளும் ஊருக்கு வெளியிலேயே நிறுத்தப்பட்டன. பத்து வருட இடைவெளிக்குப் பிறகு கடந்த சில மாதங்களாய் மறுபடியும் பேருந்துகள் ஊருக்குள் போய்வரத் தொடங்கியுள்ளன. ஏன்..? சிவந்திபட்டிக்குள் நுழைந்தால் முதலில் வருவது தேவர்கள் வசிக்கும் பகுதி. இதற்கு அடுத்து வருவது தலித்துகள் வசிக்கும் பகுதி. பேருந்துகள் அனைத்தும் தலித்துகள் தெருவரை சென்று திரும்பும். இதனால், அங்கு ஏறுபவர்களுக்கு அமர்வதற்கான வசதி சுலபத்தில் கிடைக்கும். அதற்கு அடுத்து வரும் தேவர் தெருவில் ஆட்கள் ஏறும்போது, சீட் கிடைக்கவில்லை என்றால் நின்றுகொண்டுதான் வர வேண்டும். 'ஒரு பள்ளப்பய உட்கார்ந்து வருவான். அவனுக்கு முன்னாடி நான் நின்னுகிட்டு வரணுமா..?' என்று தேவர்களுக்குக் கடுப்பு. இதனால், பேருந்து

காதலித்துப்பார்- டவுசர் கிழியும், தாவு தீரும்..!

படம்
"தோ ழர்.. காதலிக்கிறதுன்னா என்ன பண்ணனும்..?" - இரண்டாம் ஜாம தூக்கத்திலிருந்தவனை எழுப்பி இப்படி ஒரு கேள்வி கேட்ட கடுப்பை விட அந்தக் கேள்வி அவனிடமிருந்து வந்ததுதான் எனக்கு பேரதிர்ச்சியாக இருந்தது. 'என்னடா இது.. என்னைக்கும் இல்லாம இன்னைக்கு எலி ஜட்டி போட்டுகிட்டுப் போகுதே..'ன்னு எனக்கு ஆச்சர்யம். "ம்... குவாட்டர் அடிச்சுட்டு குப்புறடிச்சு தூங்கனும்.." என்ற என் பதிலை அவன் ரசிக்கவில்லை. "தோழர்.. உங்களை வெவரமானவர்னு நினைச்சுதானே இதை கேக்கேன். நீங்கபாட்டுக்கும் நக்கல் பண்ணுதியளே.." "எல.. நான் சொன்னனா நான் வெவரம்னு. நீங்களா நெனச்சுகிட்டா அதுக்கு நான் என்ன செய்ய..?" "சும்மா சொல்லுங்க தோழர்.. காதலிக்கிறவங்க என்னல்லாம் பண்ணுவாங்க..?" "இது என்னல கூறுகெட்டத்தனமா இருக்கு.. நான் என்னமோ நெதம் ரெண்டு பிள்ளைவொ கூட சுத்துறமாறி என்கிட்ட கேக்க. கழுத.. நம்மளே சீண்ட ஆளில்லாம நாதியத்துக் கெடக்கோம். இதுல ஊமையன்கிட்ட ஊத்துமலைக்கு வழிகேட்ட மாதிரி நல்லா கேட்டப்போ. அது சரி.. என்ன திடீர்னு காதலைப்பத்தியெல்லாம் கேக்க..?" காலக்கொடுமை, அந்தக் கேள்விய

நன்றி நண்பர்களே..!

'அ ரசமரத்தை சுத்திவந்து அடிவயித்தை தடவிப்பார்த்தாமாதிரி' என்றொரு பழமொழி உண்டு. 7-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30-7.00 மணிக்கு மெரீனா பீச் காந்தி சிலை அருகே சந்திப்பு என்று சொல்லப்பட்டிருந்த நிலையில் யாரையும் காணாத நிலையில் அந்த பழமொழிதான் நினைவுக்கு வந்தது. ஆனாலும் பெருவாரியாக கலந்துகொண்டு நண்பர்கள் என்னை ஆச்சர்யப்படுத்திவிட்டனர். முதல் ஆளாய் வந்தவர் மரக்காணம் பாலா. அதன்பிறகு பைத்தியக்காரன் வர, மெல்லிய தூரலை தன்னுடனேயே அழைத்து வந்தார் லிவிங் ஸ்மைல் வித்யா. ''எப்படியும் இங்கனதான் எங்கயாச்சும் கும்மியடிப்பீங்கன்னு தெரியும். அதான் போன் பண்ணாம நாமளே கண்டுபிடிச்சுடலாம்னு வந்துட்டேன்.." என்று ஹெல்மெட் கலட்டியபடியே வந்தமர்ந்தார் நந்தா. சற்று நேரத்தில் சிவாஜி மொட்டை பாஸ் போல கறுப்பு டி-சர்ட்டில் ஹீரோ கணக்காக வந்த அந்த நபர், வந்தவர்களின் பெயரையெல்லாம் விசாரித்துவிட்டு, தன் பெயர் சொல்ல சின்னதாய் சஸ்பென்ஸ் வைத்து 'நான்தான் இளவஞ்சி' என்றார். புதியவர்களின் திடீர் சந்திப்பின்போது கவிழும் மௌனத்தை தன் நகைச்சுவையால் அவ்வப்போது உடைத்தார். அப்புறம் வரிசையாக லக்கிலுக், பாலப

அனுபவிக்கத் தயாரா...?

படம்
இ ந்த வயதில் அனுபவிக்காமல் வேறு எந்த வயதில் அனுபவிப்பது, என்று வாதாடும் இளைஞனே..! எல்லாவற்றையும் அனுபவிக்கத் தயாரா நீ..? இந்த வயதில்.. கல்லூரிக்குப் போக வழியில்லை கரும்பு வெட்டி கன்னல் சுனையில் கைத்தோல் உரியும். சோறு உள்ளங்கையில் பட்டு எரியும். கட்டுகள் மின்னல் வேகத்தில் டிராக்டரில் ஏறும். கை நரம்பின் சாறனைத்தும் கரும்புக்கு மாறும். உயிரைப் பிழியும் அந்த உழைப்பை அனுபவிக்கத் தயாரா நீ..? இந்த வயதில்... உடம்பில் கிள்ளி எடுக்க சதையில்லை.. ஓட்டை பனியனுக்குள் நுழையும் காற்று, நெஞ்செலும்பின் வியர்வையில் உறைந்து ஆவியாகும். அய்ந்தாறு சதை கொழுத்த வாழைத்தாரை பழம் நோகாமல் முதுகுத் தண்டில் தூக்கிப்போகும், கூலிக்கார இளைஞனின் ஒரு பொழுதை ஜாலியாக நீ அனுபவிக்கத் தயாரா..? இந்த வயதில்... வண்டியில் வலம் வந்து, கடலைப்போட்டு, கலாய்க்காமல் எழுபது , எண்பது இளநீரை மிதி வண்டியில் காய்த்ததுபோல் அடுக்கிவைத்து எதிர்காற்றில் ஏறி மிதிக்கையில் தென்னை மரத்தின் வேர்கள் மிதிக்கும் கால்களில் தெரியும்..! உடல் வழுக்கும் வியர்வை வெட்கப்பட்டு ஓடி இளநீரின் கண்களில் ஒளியும்..! இளநீர் குளிர்ச்சி..-குடிப்பவனுக்கு..! இளநீர் சூடு..

கரகாட்டம்: வயசு போனால், பவுசு போச்சு..!

படம்
தி ரண்டு நிற்கிறது பெருங்கூட்டம். 'ர்ர்ரூரூம்.. ர்ர்ரூரூம்..' ஒலிக்கிறது உருமிமேளம். பளபளக்கின்றன ஜிகினா உடைகள். ஆரம்பமாகிறது ஆட்டம். கதவடைத்து, விளக்கணைத்து, நான்கு கண்கள் மட்டுமே விழித்திருந்து நான்கு சுவர்களுக்குள் நடக்க வேண்டிய ஆண் பெண் உடலுறவு, ஆயிரக்கணக்கான கண்களின் முன்னால் அரங்கேறுகிறது. ஒரே ஒரு வித்தியாசம், உறவில் ஈடுபடுபவர்கள் உடையணிந்திருக்கிறார்கள். இதைத்தான் நாம் நாட்டுப்புற கலை என்கிறோம். கரகாட்டம் என்றும், குறவன் குறத்தி ஆட்டம் என்றும் விதவிதமாய் பெயர் வைத்திருக்கிறோம். உண்மையில் இது கலையா..? யார் வீட்டுப் பெண்களையோ மேடையேற்றி ஆபாசமாக ஆடவிட்டு ரசிப்பதுதான் தமிழ் கலாச்சாரமா..? கிராமத்துக் கொடை விழாக்களின் இரவு நேரங்களை கொண்டாட்டங்களில் பங்கெடுக்கும் இவர்களின் வாழ்க்கை ரணம் மிகுந்தது. சராசரி பெண்கள் பேசத் தயங்கும் - ஒரு அர்த்தம் மட்டுமே கொண்ட - இரட்டை அர்த்த வசனங்களை இவர்கள், மேடைகள் தோறும் ஒலிபெருக்கிகளில் பேச வேண்டும். எல்லோரது கண்களும் தன் உடலின் எந்த பாகத்தை மேய்கின்றன என்பது தெரிந்திருந்தும், தொடர்ந்து ஆட வேண்டும். நாவில் நீரொழுக சுற்றி அமர்ந்திருக்கும் அத்தன

பால் பீய்ச்சும் மாட்டை விட்டு, பஞ்சாரத்துக் கோழியை விட்டு...

படம்
(Disclaimer about title: ஒண்ணுமில்ல..ஒரே ஃபீலிங்க்ஸ் ஆஃப் இண்டியா.. கண்டுக்காதீங்க..). "வா ழ்க்கை என்பது இரண்டு இசைக்குறிப்புகளுக்கு இடைப்பட்ட மௌனம்" என்று ஓஷோவை முன்வைத்து நேற்றெனக்கு சொல்லித்தந்த அய்யனார் முதல், "உண்மையில் மனிதன் தன்னைத் தவிர வேறு யாரையும் காதலிப்பதுமில்லை..நேசிப்பதுமில்லை. சுயநலமாக வாழ்வதே இயல்பானது" என்று உளவியலை முன்வைத்துத் துணுக்குறச் செய்த பைத்தியக்காரன் வரை.. இந்த ஏழு நாட்களில் வலையுலகம் நிறையவே வசீகரப்படுத்திவிட்டது என்னை. அ வ்வப்போது வாசிப்பு, எப்போதாவது பதிவு மற்றும் பின்னூட்டங்கள் என்றிருந்த எனக்கு, இப்படி தினம் ஒரு பதிவு போட வேண்டும் என்ற நிபந்தணையே கொஞ்சம் அவஸ்தையானதுதான். பிளாக் தொடங்கி ஒண்ணரை வருடங்களாகிவிட்ட நிலையில், இதையும் சேர்த்து நான் இதுவரை எழுதியிருக்கும் பதிவுகளின் மொத்த எண்ணிக்கையே 65 தான். ஆனாலும் அவ்வப்போது நண்பர்கள் ஓடிவந்து தட்டிக்கொடுப்பார்கள். மதி கந்தசாமி, என்னுடைய சில கட்டுரைகளை ஆங்கிலம் மற்றும் பிரெஞ்ச் மொழிகளில் மொழிபெயர்த்து எழுதியிருந்ததைப் படித்தபோது, 'பார்றா.. இந்தப்பயலுக்கு அடிச்ச யோகத்த..' என்று என

"மண் பூனை எலியைப் பிடிக்காது" -தி.க.சி.

படம்
சு டலை மாடன் கோயில் தெரு... திருநெல்வேலி-டவுண் பகுதியில் இருக்கும் இந்த தெரு, எழுத்தாளர்கள் பெரும்பாலானவர்களுக்கு பரிட்சயமானதாகவே இருக்கும். குறுகலான தெருவின் கடைசிக்கு முன்பாகவுள்ள, இடது வாசல் வீட்டுக்குள் நுழைந்தால் மெல்லிய தேகத்தோடு வரவேற்பார் தி.க.சிவசங்கரன்.. சுருக்கமாக தி.க.சி. தமிழ் இலக்கிய விமர்சனத்தின் முக்கிய பங்காற்றிய இவருக்கு இப்போது 85 வயது. சில மாதங்களுக்கு முன்பு மனைவி இறந்துவிட்டபிறகு, புத்தகங்களும் இவரும் மட்டுமே வசிக்கின்றனர் அவ்வீட்டில். எப்போது போனாலும் வாசல் வரைக்கும் எழுந்து வந்து உற்சாகமாக வரவேற்கும் பண்புடையவர். நாற்காலியை கொடுத்து அமரச் சொல்லிவிட்டு பல்செட் எடுத்து அணிந்துகொண்டுதான் அடுத்த வார்த்தைப் பேசுவார். அவரைப்பற்றி நாம் சொல்ல எவ்வளவோ இருந்தாலும் அவர் சொல்வதே அதிகமாக இருக்கும். பேசவும், எழுதவும் இப்போதும் அலுக்காத மனிதர். எங்கிருந்தோ அஞ்சலில் வரும் சிற்றிதழ்களை முழுமையாகப் படித்துவிட்டு, இரண்டு வரியாகவது தட்டிக்கொடுத்து கடிதம் எழுதிவிடுகிறார். தீவிர இலக்கிய இதழ்கள் முதல், தினமணி வரைக்கும் இவரது விமர்சனங்களைத் தாங்கிய கடிதங்கள் இப்போதும் சென்றுகொண்டிருக்க

குப்பமுத்து குதிரை..!

படம்
"என்ன மாமா.. காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிட்டியளா.. நானும் எத்தனை தடவைக் கேக்குறேன். ஒரு நாளாவது என்னையும் சந்தைக்கு அழைச்சுகிட்டுப் போங்கன்னு.." "வயசான பொம்பளை சனங்களைக் கண்டா என் தங்கராசுக்கு ஆகாதுத்தா. ஒரு வாரம் டயம் தர்றேன். கெடுவுக்குள்ள நீ கொமரிப்புள்ளயா மாறி வா.. காட்டுக்குறிச்சி சந்தையில சீனிச்சேவு வாங்கித்தர்றேன்.." -வாசல் தெளிப்பதற்காக பசுமாட்டுச் சாணியை குண்டானில் கரைத்துக்கொண்டிருந்த ஓந்தாயிக்கும், காலையிலேயே தன் குதிரை வண்டியில் காட்டுக்குறிச்சி சந்தைக்குக் கிளம்பிவிட்ட குப்பமுத்துவுக்கும் நடந்த உரையாடல் இது. "இந்த மாமாவுக்கு வயசு ஏறுனாலும் இன்னும் கொழுப்பு கொறையலை.." சிரிப்போடு சொல்லிவிட்டு சாணியை கரைக்க ஆரம்பித்த ஓந்தாயிக்கு, இப்படிப்பட்ட ஒரு பதில்தான் குப்பமுத்துவிடமிருந்து வருமென நன்றாகத் தெரியும். தெரிந்தேதான் கேட்கிறாள். இவள் மட்டுமில்லை. ஊர் பெண்களுக்கெல்லாம் குப்பமுத்து என்றால் ஒரு இதுதான். எதையாவது நோண்டி, நோண்டி கேட்பார்கள். அவரும் வயது, உடம்பு இன்னபிற தகுதிகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் எளந்தாரியாய் வார்த்தைகளை விசிறியடி

மரணத்தின் சுவை என்ன?

படம்
‘இந்த பூமியில் பிறந்த ஒவ்வொருவரும் நிச்சயம் இறந்து போவார்கள்..’ என்ற பேருண்மை புரிந்த பால்ய வயதில் அப்பிய பயம் அது. இப்போது வரைக்கும் மரணத்தை நினைத்தால் பய கங்குகள் புகையத் தொடங்கிவிடுகின்றன. மரணம் காணும்போதெல்லாம் காற்று நிரப்பப்பட்ட பலூன் ஒன்றிலிருந்து கண்ணுக்குத் தெரியாத துளை வழியாக வாழ்நாள் கசிவதாகவே தோன்றுகிறது. தேடித்தேடி பொருள் சேர்த்தாலும், எத்தகைய இயல்புடையவராயிருந்தாலும், ஊர் மெச்சும் சாதனைகள் புரிந்தாலும் ஒரு நாள் இறந்துபோவோம் என்ற உண்மையை ஜீரணிக்க முடியவில்லை. ‘விட்டுவிடப் போகுது உயிர்- &விட்டதும் சுட்டுவிடப் போகின்றார் சுற்றத்தார்..’ -என்ற பட்டிணத்தாரின் வார்த்தைகள் எப்போதும் மனதுக்குள் ஒலித்தபடியே இருக்கின்றன. இந்த மரணபயம் பல சமயங்களில் அலட்சியமாக வெளிப்படுகிறது. ‘எல்லாப்பயலும் சாகப்போறான்.. அப்புறமென்ன மயிரு..’ என்று வாழ்வின் அவமானங்களை, தோல்விகளை, வெற்றிகளை புறந்தள்ள இந்த அலட்சியம் உதவுகிறது. ‘சாவது உறுதி’ என்று தெரிந்துவிட்ட பின்பு வாழ்வு மீதான காதல், ஊற்றுபோல் பெருக்கெடுக்கிறது. குடும்ப உறுப்பினர்களை, நண்பர்களை, சுற்றத்தை, விலங்குகளை, தாவரங்களை நேசிக்க மரணத்தை விட

வாழ்க்கை என்னும் பிசாசு..!

படம்
ப டிக்கட்டுக்களை உயர்வின் அடையாளமாக உருவகப்படுத்துகிறோம் நாம். ஆனால் இவர்களுக்கோ படிக்கட்டுகள்தான் பயமுறுத்தும் பிசாசுகள். "இந்த உலகில் எங்கு திரும்பினாலும் படிக்கட்டுகளாக இருக்கின்றன. ஒவ்வொரு படிக்கட்டைப் பார்க்கும்போதும் நடுக்கமாக இருக்கிறது.." வலுவிழந்த குரலில் பேசும் இவர்கள் ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்றவர்கள். சராசரி உடல் ஊனமுற்றவர்களின் வேதனையை விட இவர்களின் தினசரி வாழ்க்கை ரணம் மிகுந்தது. இந்த பூமிக்கு வாழ வந்த நாள்முதலாய் சிறு, சிறு செய்கைகளுக்கும் இன்னொருவரின் உதவி தேவைப்படுகிறது இவர்களுக்கு. காலை எழுந்ததும் சிறுநீர் கழிப்பதில் தொடங்கும் சங்கடம் இரவு படுக்கைக்குப் போகும் வரையிலும் விடுவதில்லை. இதற்கெல்லாம் மெல்ல, மெல்ல மனதளவிலும், உடலளவிலும் பழகிவிடுகிறார்கள் என்றாலும், ஒவ்வொருமுறை ஊனத்தின் அசௌகர்யத்தை அனுபவிக்கும்போதும் அடையும் வேதனையை அவர்களால் மட்டுமே முழு வீச்சுடன் உணர முடியும். அப்படியான ஊர்ந்து செல்லும் உடல் ஊனமுற்ற நண்பர்கள், மனம் விட்டு பகிர்ந்துகொண்ட விஷயங்களை இங்கு அப்படியே தருகிறேன். 1.இறைவன் எங்களை இப்படி படைத்துவிட்டாலும், எங்களுக்கும் தெய்வ பக்தி உண்டு.

'ஏழரை' முருகன்..!

படம்
எ ப்பவும் எதையாச்சும் ஏழரையை கெளப்புறதே இந்த முருகன்பயலுக்கு வேலையாப் போச்சு. இந்நேரத்துக்கு வீட்டுக்குப் போயிருந்தால் அரசியோ, கோலங்களோ எதையாச்சும் பார்த்துக்கிட்டிருந்திருக்கலாம். முருகன்பயலால் முருகேசன் கடையிலேயே உட்கார வேண்டியதாகிடுச்சு. "நீங்கதான் மாமா கேட்டுச் சொல்லனும். இந்த நாயி இப்படி பண்றது இது மொத தடவை இல்லை. என்கிட்டதான்னு இல்ல.. எல்லார்கிட்டயும் எகனக்கி, மொகனையா எதையாச்சும் செஞ்சுகிட்டே இருக்கான்.." முனகலான குரலில் சொல்லிவிட்டு அருகிலிருந்த பூவரச மரத்திலிருந்து இலையை இனுக்கி, இனுக்கி பிய்த்துப்போட்டுக்கொண்டிருந்தான் வீரையன். அவன் துன்பம் அவனுக்கு. அவன் நிலையில் இருந்தால் நீங்களும் இப்படித்தான் புலம்பியிருப்பீர்கள். முருகன்பயல் லேசுப்பட்ட ஆளில்லை. மூக்குக்குத் தெரியாம மூக்குத்தியை திருடுற வித்தைக்காரன் அவன். அவன்கிட்ட சொந்தமா உழவுமாடும், ஏறும் இருக்கு. ஆனா, அதை அவன் மச்சினன்கிட்ட கொடுத்து மாமியார் ஊர்ல வாடகைக்கு விட்டுட்டான். இங்க எவனாவது ஏர் உழுவக் கூப்பிட்டான்னா, 'என்கிட்ட ஏர் கலப்பை இல்ல.. உழுது தர மட்டும்னா வர்றேன்'னு பட்டுன்னு சொல்லிட மாட்டான். 'பத

வேலை இருக்கு... ஆள் இல்லை..

படம்
'நா ட்டின் முதுகெலும்பு' என்பார்கள். ஆனால் முதுகெலும்பு ஒடிய உழைக்கும் விவசாயிகளின் பிரச்னைகளை மட்டும் யாரும் கண்டுகொள்ளவே மாட்டார்கள். இதுதான் நம் நாட்டின் நெடுநாளைய நிலைமை. வறட்சியும், வெள்ளமும் விவசாயிகளை குறிவைத்துத் தாக்குவது போதாதென்று கடந்த சில வருடங்களாக டெல்டா பகுதி விவசாயிகளை வேறொரு பிரச்னை சுழற்றியடிக்கிறது. விவசாயம் செய்ய போதுமான கூலியாட்கள் கிடைக்காமல் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி உள்ளிட்ட டெல்டா மாவட்ட விவசாயிகள் ஒவ்வொரு வருடமும் படாதபாடு படுகிறார்கள். இந்த வருடம் ஆற்றில் தண்ணீர் வரத்து தொடங்கிவிட்ட நிலையில், நடவு வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் பணிகள் தள்ளாட ஆரம்பித்துவிட்டன. இந்த பிரச்னையை சமூகம், பொருளாதாரம் என்ற இரண்டு பின்னணியிலிருந்து ஆராய வேண்டும். பொருளாதாரக் காரணம்: விவசாயம் செய்வதற்கான எந்த ஒரு செலவும் குறைந்துவிடவில்லை. மாறாக வருடத்திற்கு, வருடம் ஏறிக்கொண்டேதான் இருக்கிறது. வீட்டுக்கு வீடு மாடு வளர்த்து, வீட்டுக்குப் பின்னால் எருக்குழி தோண்டி, மாட்டுச்சாணத்தை எருக்குழியில் கொட்டி, அதையே நிலத்திற்கு அடியுரமாய் இட்டு விவசாயம் செய்த நம் பாரம்பரிய விவசாய

நான் பைத்தியம்.. அப்ப நீங்க..?

படம்
வி யர்வை பிசுபிசுக்கும் பேச்சுலர் அறையின் நெடியிலிருந்து தப்பித்து தனி அறையில் அடைக்கலம் புகலாம் என முடிவு செய்து, மேன்ஷன் அல்லாத புதிய அறையென்றை நான் தேட ஆரம்பித்திருந்த செவ்வாய்கிழமையன்று அவளை சந்தித்தேன். அன்றுதான் டாக்டர் ராமதாஸ், 'இந்த அரசுக்கு எனது ஆதரவு எப்போதும் உண்டு. அதற்காக பா.ம.க. வாயை மூடிக்கொண்டு சும்மா இருக்காது..' என்று வெளியிட்ட அறிக்கை தினத்தந்தியின் முதல் பக்கத்தில் வெளிவந்தது. 'டாக்டர் பின்றாரே..' என்று யோசித்து நடந்துகொண்டிருக்கும்போதுதான் கையில் லெதர் பேக்குடன் அவள் என்னைக் கடந்து சென்றாள். காலையில் தலையில் வைத்த மல்லிகை லேசாக கறுத்துப் போயிருந்தது. அவளை எனக்கு அறிமுகமில்லை. ஒரு தெரு நாய், இன்னொரு தெரு நாயுடன் சினேகம் வைத்துகொள்ள முன் அறிமுகத்தை எதிர்பார்க்காதபோது நான் மட்டும் ஏன் எதிர்பார்க்க வேண்டும்...? சாப்பிட்டுக்கொண்டிருந்த ஐஸ்கிரீமுக்கு நண்பனை துட்டுக் கொடுக்கச் சொல்லிவிட்டு அவளிடம் பேசுவதற்காகப் போனேன். அப்போது அவள் திருவல்லிக்கேணி ரத்னா கபே அருகில் தன் மென் பாதங்களால் நடந்துபோனாள். சாம்பாரின் மணம் காற்றில் பரவிக்கொண்டிருந்தது. தயக்கமேதுமி

பெண்ணுரிமை- நாம் அனைவரும் குற்றவாளிகளே..!

படம்
பெ ண்ணுரிமைப்பற்றி நிறைய பேசப்பட்டிருக்கிறது இங்கு. 'ஏன் கடவுள் முதலில் ஆதாமைப் படைத்தார்..? ஏவாளை முதலில் படைத்து, பின் அவளின் விலா எழும்பிலிருந்து ஆதாமை படைத்திருக்கக்கூடாதா..?' என்பதான கருத்துக்கள் கூட புதிதில்லைதான். 'ஆண்தான் முதலில்' என்ற கருத்தாக்கம் மனதெங்கும் நீக்கமற நிறைந்திருக்கும் ஆண்களால் உருவாக்கப்பட்ட வரலாறுகள் அப்படித்தான் இருக்கும். அதில் வியப்பேதும் இல்லை. அந்த வரலாற்றின் வீதிகளிலிருந்து, நடைமுறை வாழ்வு வரைக்கும் பெண் சந்திக்கும் பிரச்னைகள் அனைத்தின் தோற்றுவாயாக இருப்பது குடும்பம் என்னும் அமைப்புதான். அதிகாலை தூக்கத்தின் சுகம்(?) குறித்து சிலாகிக்கும் கவிதைகள், கதைகள் நிறைய படிக்கிறோம், சொல்லக் கேட்கிறோம். ஆனால், 95 % பெண்கள் அதிகாலை தூக்கம் துறந்து பல தலைமுறைகளாகிவிட்டது. கிராமமென்றால் அதிகாலையில் எழுந்து வாசல் தெளித்து, வீட்டு முற்றம் பெருக்கி, கோலம் போட்டு, பாத்திரம் விளக்கி, மாட்டுக் கொட்டகை கூட்டி, சாணம் அள்ளி எருக்குப்பையில் போட்டு, குடிக்க நல்ல தண்ணீரும், புழங்க உப்புத்தண்ணீரும் எடுத்து வைத்து, பிள்ளை மற்றும் கணவனுக்கு காபி போட்டுக்கொடுத்து... அவ